Tuesday, September 13, 2011

Chapter 2 - Saankhya Yoga [31-40]

31.
ஸ்வதர்மம் அபி சாவேக்ஷ்ய ந விகம்பிதும் அர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ (அ)ந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே
மேலும் உனது கடமையைக் கருத்தில் கொண்டு, நீ தடுமாறக் கூடாது. ஒரு க்ஷத்ரியனுக்கு தர்மத்திற்காகச் செய்யப்படும் யுத்தத்திற்கு மேலாக வேறு ஒன்றும் இல்லை.

32.
யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்க த்வாரம் அபாவ்ருதம்
ஸுகீந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தம் ஈத்ருஷம்
அர்ஜுனா! இப்படிப்பட்ட யுத்தத்தில் போர் புரிய அழைக்கப்பட்ட க்ஷத்ரியர்கள், அது சுவர்க்கத்தின் வாயிற் கதவாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். 

33.
அத சேத்த்வம் இமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி
ஆனால் ஒரு வேளை நீ இந்த தர்ம யுத்தத்தில் போர் செய்யவில்லை என்றால், அப்பொழுது நீ உனது கடமையை தவறி, புகழை இழந்து, பாபத்தைச் சேர்ப்பாய்.

34.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே(அ)வ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சா கீர்திர் மரணாத் அதிரிச்யதே
மக்களும் உனது இந்த நீங்கா இழிவை மறக்காமல் இருப்பார்கள். புகழப்பட்ட ஒருவனுக்கு, இழிவு மரணத்தை விடக் கொடுமையானது.

35.
பயாத் ரணாத் உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்
சிறந்த மஹா ரதர்கள் நீ பயத்தினால் போரில் இருந்து விலகியதாக எண்ணுவார்கள். உன்னைப் பற்றி உயர்வாக நினைக்கும் அவர்கள், இனி உன்னை குறைவாக மதிப்பிடுவார்கள்.

36.
அவாச்ய வாதாம்ச்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்
உனது பலத்தைக் கேலி செய்து உன் எதிரிகள் உன்னை பார்த்து திட்டுவார்கள். இதை விட வேறு என்ன வலி மிக்கதாக இருக்க முடியும்?

37.
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் 
தஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருத நிச்சய:
ஒரு வேளை நீ வென்றால் உனக்கு சுவர்க்கம் கிடைக்கும். வெற்றி பெற்றவனாக நீ உலகை அனுபவிக்கலாம். அதனால் குந்தியின் புத்திரனே! போர் செய்ய உறுதி கொள்.

38.
ஸுக து:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸ்யஸி
சுகமோ, துக்கமோ, லாபமோ, நஷ்டமோ, வெற்றியோ, தோல்வியோ - இதை சமம் ஆக பாவித்து, யுத்தத்திற்காக போர் செய். நீ பாவத்தைச் சேர்க்க மாட்டாய்.

39.
ஏஷா தே(அ)பிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி 
உனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இது சாங்க்யம் என்பதைக் குறித்த அறிவாகும். இனி யோகம் குறித்த அறிவை நீ கேள். இதன் மூலம் அர்ஜுனா! நீ கர்மத்தினால் எழும் பந்தத்தை உதறி விட முடியும்

40.
நேஹா பிக்ரம நாசோ(அ)ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே 
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்
இதனால் எந்த ஒரு செயல் இழப்பும் ஏற்படாது. எந்த ஒரு தீங்கும் இல்லை. இதைக் குறித்த சிறிய ஞானமும் ஒருவனை அவனது பெரும் அச்சத்தில் இருந்து காப்பாற்றும்.

விசாரம்
புருஷ சூக்தத்தில் நான்கு வர்ணங்களின் தோற்றம் பற்றி வருகிறது. பிரக்ருதியின் (இயற்கையின்) படைப்பில் புருஷாவின் (கடவுளின்)  முகத்தில் இருந்து பிராமண வர்ணம், தோளில் இருந்து க்ஷத்ரிய வர்ணம், தொடையில் இருந்து வைஷ்ய வர்ணம், பாதத்தில் இருந்து சூத்ர வர்ணம் என்று தோன்றியதாம். இது அந்த காலத்திய division of labour. அதில் க்ஷத்ரியனுக்கு சமூகத்தைக் காக்கும் பொறுப்பு. தர்மத்தை காக்க வேண்டியது அவனது கடமை.
அதர்மத்திற்காக போர் செய்யக் கூடாது - அதற்காக நியாயத்திற்காக போர் செய்யாமல் விடவும் கூடாது. அப்படி தர்மத்திற்காக யுத்தம் செய்து அவனுக்கு மரணம் சம்பவித்தால் அதை விட அவனுக்கு வேறு பெருமை எதுவும் கிடையாது. அவன் போரில் புற முதுகு காட்டினால் அதை விடவேறு சிறுமை அவனுக்கு இல்லை.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மாவைப் பற்றிய அறிவிற்கு அடுத்து - குல தர்மத்தை நிலை நாட்டும் இந்த அவசியத்தை விளக்குகிறார். அர்ஜுனன் ஒன்றும் சந்நியாசி இல்லை. ராஜ வம்சத்தில் வந்தவன். அவனுக்கு தனது குலப் பெருமையை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. துர்யோதனனோ எப்பொழுது, எப்படி பாண்டவர்களின் நிலத்தை அபகரிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது அர்ஜுனன் போர் செய்ய தயங்கினால் அவன் கௌரவர்களின் படை பலத்தைக் கண்டு அஞ்சி தான் இப்படி பின் வாங்கினான் என்று எதிரிகள் அவனைக் கேலி செய்வார்கள். இது வரை பாராட்டப்பட்ட அர்ஜுனனுக்கு இதை விட வேறு என்ன இழிவு இருக்க முடியும். அவமானம் மரணத்தை விடக் கொடுமையானதே.

சென்ற வாரம் ஸ்தித பிரக்யன் என்ற ஒருவனைப் பற்றி பார்த்தோம். ஜனனம், மரணம் இரண்டையும் சமமாகப் பாவிப்பவன் அவன். அவன் அதை மட்டும் அல்ல - சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி இதையும் சமமாகப் பாவிப்பான். இப்படி ஒரு நிலையை அடைய என்ன வேண்டும்? நாம் செய்யும் கர்மாக்களின் பலன்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் - அதற்காக கர்மாவே செய்யக் கூடாது என்று அர்த்தம் இல்லை. கர்மாவைச் செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் கடமை தவறியவன் ஆகிறோம். முன்பு பார்த்தோமே உடலைக் குறித்த detached attachment - அது இங்கே நம் கர்மாவின் மீதும் வேண்டும். ஆத்மா உறைய ஒரு கருவியாக உடல் இருக்கிறது. அது போலவே கர்மா என்ற ஒன்றைச் செய்ய கர்த்தா என்ற கருவி அவசியப்படுகிறது. இதைக் குறித்த அறிவு கர்ம யோகமாக அடுத்து வருவது. 

2 comments:

  1. ஸாங்க்ய யோகா படிக்கப்படிக்க மனசே லேசாவது போல இருக்கு அர்த்தம் தெரிந்து படிப்பதால் நல்லா இருக்கு. நல்ல பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. உண்மை தான். லௌகீக வாழ்க்கையில் எதுவுமே சாஸ்வதம் இல்லை, ஏன் வருத்தப்படனும்னு புரிய வைக்கறது இல்லையா?

    ReplyDelete