Thursday, December 29, 2011

Chapter 5 - Sannyaasa Yoga [1-10]

1.
அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச சம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோர் ஏகம் தந்மே ப்ரூஹி ஸுநிச்சிதம்
அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா! கர்ம சந்ந்யாசத்தைப் பற்றி புகழ்கிறாய். பின்னர் மீண்டும் கர்ம யோகத்தில் ஈடுபடுவது குறித்து சொல்கிறாய். இந்த இரண்டில் எது சிறந்தது என்று நீ உறுதிபட கூறுவாயாக.

2.
ஸ்ரீ பகவான் உவாச
ஸந்ந்யாஸ: கர்மயோகச்ச நி: ஸ்ரேய ஸகரா வுபௌ
தயோஸ்து கர்ம ஸந்ந்யாஸாத் கர்மயோகோ விசிஷ்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது
ஸந்ந்யாஸமும், கர்ம யோகமும் - இரண்டுமே உயர்வானதொரு ஆனந்தத்தை நோக்கி வழி நடத்தும். ஆனால் இவை இரண்டிலும் கர்ம யோகமானது கர்ம ஸந்ந்யாஸத்தை விட உயர்வானதாகும்.


3.
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர் த்வந்த்வோ ஹி மஹாபஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே
எவன் ஒருவன் எந்த த்வேஷமும், பற்றும் கொள்வதில்லையோ, அவனே நித்ய ஸந்ந்யாஸி என அறியப்படுகிறான். பலம் வாய்ந்த அர்ஜுனா! நேர்மறையான ஜோடிகளில் இருந்து விடுபட்டவனான ஒருவன் எளிதில் பந்தத்தில் இருந்து விடுபடுகிறான்.

4.
ஸாங்க்ய யோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகம் அப்யாஸ்தித: ஸம்யக் உபயோர் விந்ததே ப(फ)லம்  
ஞானமும், கர்ம யோகமும் (செயல்களைச் செய்வது) வேறு எனவும், அவற்றைத் தனியாகவும் குழந்தைகள் தான் பார்ப்பார்கள் - அறிவாளிகள் அல்ல. எவன் ஒருவன் திடமாக இவை இரண்டிலும் எதாவது ஒன்றில் நிலை கொண்டுள்ளானோ, அவன் இந்த இரண்டின் பலன்களையும் பெறுகிறான்.


5.
யத் ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத் யோகைர் அபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி
ஸாங்க்ய யோகத்தைக் கடைப் பிடிப்பவர்கள் எந்த இடத்தைப் பெறுகிறார்களோ, அதே இடத்தை கர்ம யோகிகளும் பெறுகிறார்கள்.  எவன் ஒருவன் ஞானத்தையும், கர்ம யோகத்தையும் ஒன்றாகக் காண்கிறானோ, அவனே (பிரம்மத்தை) கண்டவன்.

6.
ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கம் ஆப்தும் அயோகத:
யோக யுக்தோ முநிர் ப்ரஹ்ம ந சிரேணாதி கச்சதி 
மகா பலம் பொருந்திய அர்ஜுனா! யோகம் என்ற ஒன்று இல்லாமல் ஸந்ந்யாஸம் பெறுவது கடினம். யோகத்தைக் கைவரப் பெற்றவன் பிரம்மத்தை நோக்கி முன்னேறுகிறான்.


7.
யோகயுக்தோ விசுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
ஸர்வ பூதாத்ம பூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே
எவன் (கர்ம) யோகத்தில் பற்று கொண்டுள்ளானோ, எவன் மனம் பவித்ரமாக இருக்கிறதோ, எவன் தன்னை வெற்றி கொண்டுள்ளானோ, எவன் தனது இந்திரியங்களை அடக்கி தன்னுள் இருக்கும் ஆத்மாவே எல்லா உயிர்களிலும் உள்ள ஆத்மா என உணர்நதுள்ளானோ, அவன் செயல்களைச் செய்தாலும் அதனால் அவன் கறைபடாதவனாவான். (அச்செயல்கள் அவனைக் கட்டுப்படுத்தாது.)

8.
நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
பச்யஞ் ஸ்ருண்வந் ஸ்ப்ருசஞ் ஜிக்ரந் நச்நந் க(ग)ச்சந் ஸ்வபஞ் ச்வஸந்
உண்மையை உணர்ந்த ஒரு ஞானி இவ்வாறு எண்ணுவான் - 'நான் ஒன்றும் செய்வது இல்லை'. காண்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, உண்பது, செல்வது, உறங்குவது, சுவாசிப்பது,

9.
ப்ரலபந் விஸ்ருஜந் க்(ग)ருஹ்ணந் நுந்மிஷந் நிமிஷந்நபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்
பேசுவது, விட்டுத் தொலைப்பது, கவர்வது, கண்ணைத் திறப்பது, மூடுவது என்று சகல விஷயங்களிலும் புலன்கள் இந்த்ரியங்களுள்ளே இயங்குகின்றன என்று அவன் அறிவான்.

10.
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேந பத்ம பத்ரம் இவாம்பஸா   
தாமரை இலையில் எப்படி நீர் ஒட்டுவதில்லையோ, அதைப் போல எவன் ஒருவன் தனது கடமைகளைச் செய்து, அவற்றின் மீதான பற்றைத் தொலைத்து, கடமையைப் பிரம்மத்திற்கு அர்ப்பணிப்பனோ அவனைப் பாவம் தீண்டாது.        

விசாரம்
ஆதி சங்கரர் தனது சிஷ்யர்களுடன் காசியில், கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு கோவிலுக்குப் போகும் போது சிவ பெருமான் ஒரு சண்டாள ரூபத்தில் அவர் முன் தோன்றுவார். ஆச்சாரியார் அதை அறியாமல் அந்த சண்டாளனை வழியை விட்டு விலகுமாறு சொல்லும் போது சிவன் அவரிடம், எதை விலகச் சொல்கிறாய் - இந்த உடலையா இல்லை அதனுள் இருக்கும் ஆத்மாவையா? உடல் என்றால் அது அழியக் கூடிய ஒன்று, நிரந்தரம் இல்லாத ஒன்று; ஆத்மா என்றால் அது எல்லோருக்கு உள்ளும் இருப்பது, உனக்குள் இருக்கும் ஆத்மா தான் எனக்குள்ளும், எல்லோருக்குள்ளும் இருக்கிறது.' என்று கூறுவார். ஆதி சங்கரரும் இந்த உண்மையை உணர்ந்து 'மணீஷ பஞ்சகம்' என்ற 5 ஸ்லோகத்தைப் பாடுவார். ஆத்ம ஞானத்தை உணர்த்துவது இது. ஆதி சங்கரர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் அவர் முன்னே சிவனே தோன்றி ஞானத்தை உணர வைத்தார். நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இது சாத்தியம் இல்லையே. நமக்கு சாத்தியமான ஒன்று கீதையில் கூறப்பட்டுள்ளது.

அர்ஜுனனுக்கு கர்ம யோகம் சிறந்ததா இல்லை கர்ம சந்ந்யாச யோகம் சிறந்ததா என்ற சந்தேகம் வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதற்கு பதில் பெறுகிறான். பகவான் சொல்வது என்னவென்றால் இரண்டுமே ஆத்ம ஞானம் என்ற ஒன்றை நோக்கித் தான் ஒருவனைச் செலுத்துகின்றன. கர்ம யோகம் சிறந்ததாக இருந்தாலும் இரண்டிற்கும் இடையே எந்த வித்யாசமும் இல்லை. கர்ம யோகி ஆக இருப்பது முதல் நிலை. முன்பே பார்த்தோம் - யாருமே எப்பொழுதுமே, எதுவுமே செய்யாமல் சும்மா இருக்க முடிவதில்லை. எப்பொழுது ஒரு செயலைச் செய்பவன் மனத் தூய்மை பெற்று, பற்றில்லாமல் தனது செயல்களைச் செய்கிறானோ, அப்பொழுது அவன் மனம் அந்த பிரம்மத்தில் நிலை கொள்கிறது. அவன் மனம் பிரம்மத்தைக் குறித்தே சிந்தித்து, செயல்களைச் செய்யும் போது அவன் செயல்களைச் செய்தாலும் எதுவுமே செய்யாதவனாகவே ஆகிறான் - 'inaction in action'. தன்னைச் சுற்றி நடக்கும் எல்லா செயல்களுக்கும் அவன் வெறுமனே ஒரு பார்வையாளன் ஆகிறான். தனது எல்லாச் செயல்களையும் ஈஸ்வரார்ப்பணம் செய்து, பலன்களை விலக்கி, நிர்மலமான மனதுடன் தன்னை அந்த பிரம்மத்திற்கே சமர்ப்பிக்கின்றான். தனது எல்லா ஆசைகள், பற்றுகள், தான் என்ற எண்ணம் இவற்றை எல்லாம் தொலைக்கும் போது கர்ம சந்நியாச யோகி என்ற நிலையை அவன் அடைகிறான் - பிறப்பற்ற நிலையைப் பெறுகிறான். இந்த கர்ம சந்நியாச நிலையில் அவனுக்கு தன்னுள்ளே இருக்கும் ஆத்மாவே எல்லா உயிர்களிலும் - அது பசுவோ, நாயோ, செடியோ எல்லாவற்றிலும் ஆத்மாவாக இருப்பதை உணர்கிறான். இது தான் Self Realization. நித்திய ஆனந்த நிலையில் இருக்கும் இவனுக்கு எந்த விதமான சுகமோ, துக்கமோ, ஆசையோ, வருத்தமோ கிடையாது.














Wednesday, December 21, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [31 - 42]

31.
யஜ்ஞசிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரம்ஹ ஸநாதாநம் 
நாயம் லோகோ(அ)ஸ்த்ய யஜ்ஞஸ்ய குதோ(அ)ந்ய: குருஸத்தம
யஜ்ஞத்தில் படைக்கப்பட்டது போக அமிர்தம் போன்ற மீதியை (இன்னொரு அர்த்தம் நைவேத்யம் செய்யப்பட்டது) உண்பவன் அந்த பிரம்மத்தை அடைகிறான். யாகம் எதையுமே செய்யாதவன் இந்த இல் உலகிற்கே தகுதி இல்லாதவன். பின்னர் எப்படி அர்ஜுனா! அவனால் இன்னொரு உலகை அடைய முடியும்.

32.
ஏவம் பஹூவிதா யஜ்ஞா விததா ப்ரம்ஹணோ முகே
கர்மஜாந் வித்திதாந் ஸர்வாந் ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே
இப்படியாக பல விதமான படையல்கள் அந்த பிரம்மத்தின் முன்னே பரப்பி வைக்கப் பட்டுள்ளன. இவை எல்லாமே கர்மம் என்ற ஒன்றினாலேயே தோன்றி உள்ளன. இதை அறிந்ததால் நீ விடு பெற முடியும்.

33.
ஸ்ரேயாந் திரவ்யமயாத் யஜ்ஞாஜ் ஜ்ஞாந யஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே 
பரந்தபா! பொருட்களால் யஜ்ஞம் செய்வதைவிட ஞானத்தால் செய்வது சிறந்தது. அர்ஜுனா! எல்லா செயல்களும் முற்றிலுமாக ஞானத்திலேயே முற்று பெறுகின்றன.  

34.
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்சிந:
இந்த பிரம்மத்தை உணர்ந்த சான்றோர்களை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதன் மூலமும், கேள்வி கேட்பதன் மூலமும், அவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவர்கள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்.

35.
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹம் ஏவம் யாஸ்யஸி பாண்டவ
யேந பூதாந்ய சேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி
அர்ஜுனா! அதை அறிந்ததன் மூலம் நீ மீண்டும் இது போல கலங்கி இருக்க மாட்டாய். அதன் மூலம் நீ எல்லா உயிர்களையும் உன்னுள்ளும், என்னுள்ளும் காண்பாய்.

36.
அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
ஸர்வம் ஜ்ஞாநப்லவே நைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி
நீ பாபிகளிலும் மகாபாபியாக இருந்தாலும், இந்த ஞானத்தின் மூலம் நீ எல்லா பாவங்களையும் தொலைத்து விடலாம்.

37.
யதைதாம்ஸி ஸமித்தோ(அ)க்நிர் பஸ்மஸாத் குருதே(அ)ர்ஜுந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா
அர்ஜுனா! அக்னியானது எப்படி ஸமித்துக்களை (யஜ்ஞத்தில் பயன்படும் ஸமித்துக்கள்) பஸ்பம் ஆக்குகிறதோ, அப்படியே ஞானம் ஆகிய அக்னி எல்லா செயல்களையும் பஸ்பம் ஆக்குகிறது.

38.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே
தத் ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி
இந்த உலகில் ஞானத்தைப் போன்று வேறு பவித்ரமான பொருள் ஒன்றில்லை.யோகத்தில் எவன் தேர்ந்துள்ளானோ, அவன் தகுந்த சமயத்தில் அந்த ஞானத்தைப் பிரம்மத்தில் காண்பான்.

39.
ஸ்ரத்தாவாந்ல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஷாந்திமசிரேணாதி கச்சதி
எவன் ஒருவன் முழு ஷ்ரத்தையுடன், பக்தியுடன், புலன்களை அடக்கி இருக்கிறானோ அவன் இந்த ஞானத்தைப் பெறுகிறான். அந்த ஞானத்தை பெற்ற உடன் அவன் உடனே அந்த சித்தானந்த நிலையாகிய பரம சாந்தியைப் பெறுகிறான்.

40.
அஜ்ஞச் சாஸ்ரத் ததாநச்ச ஸம்சயாத்மா விநச்யதி
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்சயாத்மாந:    
அறிவீனர்கள், பக்தி இல்லாதவர்கள், சந்தேகம் கொண்டவர்கள், அழிவை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களுக்கு இந்த உலகும் இல்லை, மறு உலகும் இல்லை. இப்படி சந்தேகப்படுபவர்களுக்கு மனதில் எந்த சுகமும் இருப்பதில்லை.

41.
யோக ஸந்ந்யஸ்த கர்மாணம் ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்சயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய
அர்ஜுனா! எவன் ஒருவன் யோகத்தினால் கடமையில் இருந்து சந்ந்யாசம் (விடு) பெறுகிறானோ, எவனது சந்தேகங்கள் ஞானத்தினால் அழிக்கப்பட்டு விட்டதோ, எவன் தன்னை தானே வெற்றி கொள்கிறானோ - அவனைச் செயல்கள் கட்டுபடுத்துவதில்லை.

42.
தஸ்மாத் அஜ்ஞாந ஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிந ஆத்மந:
சித்த்வைநம் ஸம்சயம் யோகம் ஆதிஷ்டோத்திஷ்ட பாரத
அர்ஜுனா! ஆகையால் பிரம்மத்தைப் பற்றிய ஞானம் என்ற வாளைக் கொண்டு, உன் மனதில் உள்ள அறியாமையால் விளைந்த உனது சந்தேகங்களை வெட்டி, யோகத்தில் சரண் அடை. எழுச்சி பெறு.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஜ்ஞாநகர்மஸந்ந்யாஸயோகோ நாம சதுர்தோ (அ)த்யாய:  
       
விசாரம்
பாகத புராணத்தில் அஜமிளா என்ற ஒரு பாத்திரம் வரும். பிராமண குலத்தில் பிறந்தவன் தான் இவன். ஒரு சமயம் தாசி ஒருத்தியைக் கண்டு, அவளை மோஹித்து தனது நித்ய கர்மாக்களை மறந்து அவளுடனே சிற்றின்பத்தில் மூழ்கி இருப்பான். அவனது காலம் முடியும் நேரம் வரும் போது எம தூதர்கள் வருவார்கள். அவன் அச்சமயத்தில் நாராயணன் என்ற பெயர் கொண்ட தனது பிள்ளையை அழைப்பான். உடனே வைகுண்டத்தில் இருந்து விஷ்ணு தூதர்கள் வந்து அவனை எம தூதர்களிடம் இருந்து மீட்பார்கள். அச்சமயத்தில் அவனுக்கு ஞானம் வரும் - நாராயணா என்ற நாமத்தை உச்சரித்ததற்கே இந்த பலன் என்றால் முழுவதும் ஈஸ்வர உபாசனை செய்தால் எப்படிப்பட்ட பலன் கிடைத்திருக்கும் என்று எண்ணிப் பார்த்து, பின்னர் காசி சென்று தவம் செய்து மோக்ஷம் பெறுவான். அவன் முன்பு செய்த நற் செயல்கள் அவனுக்கு தகுந்த நேரத்தில் ஞானத்தைக் கொடுத்தது. மகா பாபி ஆக இருந்தும் அதைப் போக்கி அவனுக்கு மோக்ஷம் கிடைத்தது.

நமக்கும் இப்படித் தான். யாகத்தில் சமர்பிக்கப்படும் ஸமித்துக் கட்டைகள் எப்படி நெருப்பில் பஸ்பம் ஆகிறதோ அப்படியே மனதில் இந்த ஞானம் உதித்த க்ஷணத்தில் நமது கர்மாக்கள் எரிந்து விடுகின்றன. முன்பே பார்த்தோம் - தான் என்ற எண்ணம் மனதில் அழிந்தால் தான் கர்ம பலனில் இருந்து விடு பெற முடியும். மனதில் ஞானம் வரும் போது தான் கர்ம சந்ந்யாசம் அடையலாம்.

இந்த ஞானம் பெறுவதற்கு மனதில் சிரத்தையும், பக்தியும் அவசியம். மனதில் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். குமாரில பட்டரை இங்கே குறிப்பிட வேண்டியது வருகிறது. அவரை பௌத்தர்கள் மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிய போது, தான் கற்ற வேத சாஸ்திரம் உண்மையானால் தன்னைக் காப்பாற்றும் என்று கூறினார். அவர் மனதில் அந்த இம்மியளவு சந்தேகம் இருந்ததால் தான் அவர் உயிர் பிழைத்தும் கண் பார்வை போயிற்று.  

வெறும் ஏட்டறிவு ஞானத்தைக் கொடுக்காது. பஜ கோவிந்தத்தில் ஆச்சார்யாள் சொல்ற மாதிரி வெறும் இலக்கண அறிவு இறுதியில் பயன் படாது. ஒருவன் முதலில் தன்னைக் கட்டுப்படுத்தியவனாகவும், பக்தி மற்றும் நம்பிக்கையுடன் இருக்கும் போது தான் அந்த ஆத்ம ஞானம் அவனுள் வரும். அப்படி நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அழிவு தான் வரும். கற்று உணர்ந்த குருவிடம் பணிவுடன், இந்த நம்பிக்கை, பக்தியுடன் கற்றால் தான் அந்த ஆத்ம ஞானம் பெற்று கர்மத்தில் இருந்து விடு பட முடியும்.

Wednesday, December 14, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [21-30]

21.
நிராசீர்யத சித்தாத்மா த்யக்த ஸர்வ பரிக்ரஹ:
சாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்
எந்த ஆசையும் இல்லாமல், மன, உடல் கட்டுப்பாட்டுடன், பேராசையை தொலைத்து, வெறும் சரீர செயலை மட்டுமே செய்வதால், அவன் எந்த பாவத்தையும் சேர்ப்பதில்லை.

22.
யத்ருச்சாலாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:    
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே
பெரு முயற்சி எதுவும் இல்லாமல் தனக்கு எது கிடைக்கின்றதோ அதில் திருப்தி பட்டுக் கொண்டு, எதிர்மறை ஜோடிகள்(முன்பே பார்த்தோம்), பொறாமை இவற்றில் இருந்து விடுபட்டு, வெற்றி/தோல்வி இரண்டையும் சமமாக மனதில் பாவித்து இருப்பதால், அவன் செயல்பட்டாலும் அந்த செயல்களால் அவன் கட்டுப்படாதவன் ஆகிறான்.


23.
க(ग)த ஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநா வஸ்தித சேதஸ:   
யஜ்ஞாயா சரத: கர்ம ஸமக்ரம் பிரவிலீயதே
பற்றில்லாமல் இருப்பவனுக்கு, விடுபட்டவனுக்கு, எவன் மனது ஞானத்தில் நிலை கொண்டுள்ளதோ, எல்லாச் செயல்களையும் ஈஸ்வர அர்ப்பணம் என்றே செய்கிறானோ - அவனுக்கு எல்லா காரியங்களும் நழுவி விடுகின்றன (அந்த செயல்களால் அவனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை).

24.
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேந க(ग)ந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா 
பிரம்மத்திற்கு அர்ப்பணமாக, பிரம்ம ஹவிர் என்ற பிரம்மம் ஆகிய உருக்கிய நெய்யை, ஹோமத்தில் பிரம்மமாகிய அக்னிக்கு சமர்ப்பிப்பவன், தனது செயல்களில் பிரம்மத்தைக் காண்பவன் எவனோ - அவன் பிரம்மத்தை நிச்சயம் அடைவான். (தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும், எல்லா செயல்களிலும் பிரம்மத்தைக் காண்பவன் பிரம்மத்தை நிச்சயம் அடைவான்).

25.
தைவம் ஏவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோ பஜூஹ்வதி
சில யோகிகள் கடவுளுக்கு வெறுமனே படையல் மட்டும் வைக்கிறார்கள். பிரம்மத்தைப் புரிந்த மற்றவர்கள், பிரம்மம் ஆகிய அக்னியில் பிரம்மத்தையே பிரம்மத்திற்கு படைக்கிறார்கள்.

26.
ஸ்ரோத்ராதீந் ஈந்த்ரியாண் யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
சப்தாதீந் விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி 
சிலர் செவி முதலான புலன்களை அடக்குவதன் மூலம், அந்த அக்னிக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள். மற்றவர்கள் சப்தம் (மந்திர உச்சாடனம்) மற்றும் பிற இந்த்ரிய பொருட்கள் மூலமாக அந்த இந்த்ரிய அக்னிக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

27.
ஸர்வாணீந்த்ரிய கர்மாணி ப்ராண கர்மாணி சாபரே
ஆத்ம ஸம்யமயோகா(ग)க்(ग)நௌ ஜுஹ்வதி ஜ்ஞாந தீபிதே
மற்றும் சிலர் புலன்களின் எல்லா செயல்களையும், ப்ராண சக்தியையும் ஞானத்தால் பற்ற வைக்கப் பட்ட அந்த சுய கட்டுப்பாட்டு யோகம் என்ற அக்னியில் அர்ப்பணிக்கிறார்கள்.

28.
த்ரவ்ய யஜ்ஞாஸ் தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யா யஜ்ஞாந யஜ்ஞாச்ச யதய: ஸம்சித வ்ரதா:
சிலர் செல்வங்களையும், தவத்தையும், யோகத்தையும் அர்ப்பணிக்கிறார்கள். சுய கட்டுப்பாடு மற்றும் கடுமையான அனுஷ்டானங்களை அனுசரிக்கும்
முனிவர்கள் வேத பாராயணம் மற்றும் அறிவை அர்ப்பணிக்கிறார்கள்.

29.
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே(அ)பாநம் ததாபரே
ப்ராணாபாநக(ग)தீ ருத்த்வா ப்ராணாயாம பராயணா
மற்றும் சிலர் மூச்சை உள் இழுப்பதிலும், சிலர் மூச்சை வெளி இடுவதிலும், சிலர் மூச்சை அடக்குவதிலும் (பிராணாயாமம்) தங்களின் அர்ப்பணிப்பைச் செய்கிறார்கள்.

30.
அபரே நியதா ஹாரா: ப்ராணாந் ப்ராணேஷு ஜுஹ்வதி 
ஸர்வே(அ)ப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞஷபித கல்மஷா:     
சிலர் தங்களின் ஆகாரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், உயிர்களுக்கெல்லாம் உயிர் மூச்சை அளிக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே யஜ்ஞத்தை அறிந்தவர்கள். இவர்களின் எல்லா பாவங்களும் அந்த யக்னத்தில் அழிந்து விடுகிறது.

விசாரம்
ஈஸ்வரனை அடைய எண்ணுபவர்கள் பல்வேறு விதத்தில் தங்களின் அர்பணிப்பைச் செய்கிறார்கள். செல்வந்தர்கள் செல்வத்தாலும் (கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது), ஞானிகள் தங்கள் ஞானத்தாலும் (உபன்யாசம் செய்வது), சிலர் புலன் அடக்கி தியானம் செய்தும், சிலர் அந்த புலன் மூலமாகவே ஈஸ்வரனைப் புகழ்ந்து பேசியும், பாடியும் அந்த அர்பணிப்பைச் செய்கிறார்கள். இவர்கள் எல்லோருடைய நோக்கமும் அதன் மூலம் அந்த இறைவனை அடைவது. அந்த அர்ப்பணங்கள் மூலம் அவர்கள் மனம் சுத்தம் அடைந்து, பலன்களில் பற்று விலக்கப்படும் போது அந்த மனம் ஆன்மீகப் பாதையில் செல்கிறது. ஞானம் என்ற ஒன்றை அடைய நினைக்கிறது.

ஞானத்தைப் பெறுவதற்கு ஒரு குரு - ஆசிரியர் அவசியம். அவரைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.
அந்த குரு பிரம்மத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும். இது தான் அவருக்கு இருக்க வேண்டிய தகுதி.
குருவைத் தேடித் போகும் சீடனும் பக்தியுடன், பணிவுடன் செல்ல வேண்டும்.  இது சீடனுக்கு இருக்க வேண்டிய தகுதி.
பகவான் எந்த வழியில் பக்தர்கள் அவரை அடைய நினைத்தாலும், அவர்களை ஏற்றுக் கொள்கிறார்.  பகவான் இப்படிப்பட்ட குரு ரூபத்தில் அவனுக்கு ஞானத்தைப் போதிக்கிறார். இதன் மூலம் அவன் மனதில் உள்ள அறியாமை தொலைகிறது, ஞானம் வருகிறது.

ஞானம் பெற்றவன் எல்லா உயிர்களிலும் பிரம்மத்தைக் காண்கிறான். கடவுளும் பிரம்மம் தான், அற்பப் புல்லும் பிரம்மம் தான். அந்த புல்லும் அவனுக்கு பகவானாகத் தான் தெரியும். அவனும் பிரம்மம், சர்வமும் பிரம்மம்.
இந்த ஞானத்தைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட பாபி ஆக இருந்திருந்தாலும், அவனது பாவங்கள் எல்லாம் தொலைக்கின்றான். எப்படி ஒரு விறகு தீயினால் எரிக்கப்படுகிறதோ, அதைப் போல அவனது எல்லாச் செயல்களும் அந்த ஞானம் ஆகிய அக்னியில் எரிக்கப் பட்டு விடுகிறது.  

PS
வரும் 16 ம் தேதி முதல் மார்கழி மாதம். கீதையில் சொன்ன மாதிரி மாதங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் மார்கழியாக இருக்கிறார். தேவர்களுக்கு இந்த மாதம் ஒரு நாளின் ப்ரஹ்ம முஹூர்த்தத்தைப் போன்றது. ஒரு நாளுக்கு சுமாராக அதிகாலை 4 : 3௦ - 6 : ௦௦ வரை உள்ள சமயம் ப்ரஹ்ம முஹூர்த்தம். ப்ரஹ்ம முஹூர்த்தம் போது செய்யும் பூஜைகளுக்கு பலன் அதிகம். எனவே தான் மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த மார்கழி மாதத்தில் தெய்வ உபாசனை மட்டுமே செய்கிறோம். 

Monday, December 5, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [11-20]

11.
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச: 
எந்த வழியில் மக்கள் என்னை அணுகினாலும், அப்பொழுதும் நான் அவர்களுக்கு அநுக்ரஹிப்பேன். அர்ஜுனா! என் பாதையை எல்லா வழியிலும் மக்கள் தொடர்கிறார்கள்.

12.
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர் பவதி கர்மஜா
இந்த உலகில், தங்கள் செயலில் வெற்றி பெற விரும்புபவர்கள், இறைவனுக்கு படையல் இடுகிறார்கள். ஏனென்றால் வெற்றி என்பது மனிதர்களுக்கு செயலின் மூலமே விரைவில் கிடைக்கின்றது.

13.
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்ய கர்தாரம் அவ்யயம்
குணம் மற்றும் செயலைப் பொருத்து - அதன் அடிப்படையில் நான்கு வித வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டன. நான் தான் அதன் கர்த்தா என்றாலும், என்னை நீ செயல் புரியாதவனாகவும், அழிக்க முடியாதவனாகவுமே அறிந்து கொள்.

14.
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம ப(फ)லே ஸ்ப்ருஹா:  
இதி மாம் யோ(அ)பி ஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே
செயல்கள் என்னைக் கட்டுப்படுத்தாது. அதைப் போல எனக்கு அந்த செயல்களின் பலன்களிலும் பற்று இல்லை. என்னை இவ்வாறு அறிந்தவனும் அவ்வாறே செயல்களால் கட்டுப்படாதவன் ஆகிறான்.

15.
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்
இதை அறிந்தே பண்டைய காலத்தில் மோக்ஷத்தை விரும்பியவர்களும், கடமையைச் செய்தார்கள். ஆகையால் நீயும் பண்டைய காலத்தின் முன்னோர்கள் போல உன் கடமையைச் செய்.

16.
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ(அ)ப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம பிரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)சுபாத்
எது செயல்? எது செயலின்மை? இதைக் குறித்து அறிவாளிகளும் குழம்பிப் போய் உள்ளார்கள். ஆகையால் நான் உனக்கு அந்த செயல்/செயலின்மை குறித்த விளக்கத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன். இதை அறிவதன் மூலம் நீ சம்சாரச் சுழலாகிய ஜனனம்/மரணம் என்ற கொடுமையில் இருந்து விடுதலை பெறலாம்.

17.
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணச்ச போத்தவ்யம் க(ग)ஹநா கர்மணோ க(ग)தி:
சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயலின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே செய்யக் கூடாத செயல் பற்றியும், செயலின்மையைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். செயலைப் பற்றிய அர்த்தத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினமே.

18.
கர்மண்யகர்ம ய: பச்யேத் அகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமாந் மனுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்ந கர்மக்ருத்
எவன் ஒருவன் செயலில் செயலின்மையைக் காண்கிறானோ, செயலின்மையில் செயலைக் காண்கிறானோ, அவனே மனிதர்களில் சிறந்தவன், யோகி, எல்லாச் செயல்களையும் செய்பவன்.

19.
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா(भा): காம ஸங்கல்ப வர்ஜிதா:
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹூ: பண்டிதம் புதா: 
எவன் ஒருவனது செயல்கள் ஆசை மற்றும் சுயநலம் இன்றி உள்ளதோ, எவனது செயல்கள் ஞானம் என்ற அக்னியால் புடம் போடப்பட்டுளதோ - அவனையே சான்றோர்கள் பண்டிதன் என்பார்கள்.


20.
த்யக்த்வா கர்ம ப(फ)லா ஸங்கம் நித்ய த்ருப்தோ நிராச்ரய:  
கர்மண்ய பிப்ர வ்ருத்தோ(அ)பி நைவ கிஞ்சித் கரோதி ஸ:
கடமையின் பலன் மீது உள்ள பற்றை விட்டவன், எப்பொழுதும் திருப்தியுடன், எதன் மீதும் சார்ந்து இல்லாமல் இருப்பவன், செயலில் ஈடுபட்டிருந்தாலும் அவன் எதுவும் செய்யாதவனாகிறான்.

விசாரம்
ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதைப் போன்று இந்த செயல்/செயலின்மையைப் புரிந்து கொள்வது கொஞ்சம் குழப்பமானது தான்.
எவன் ஒருவன் பற்றில்லாமல் தன் காரியங்களைச் செய்கிறானோ (நிஷ்காம்ய கர்மா), எவன் அந்த செயல்களின் பலன்கள் மீது ஒரு பற்றில்லாமல் இருக்கிறானோ, அவனுடைய மனதில் தான் தான் அந்த செயல்களின் கர்த்தா என்ற எண்ணம் தொலைந்து விடுகிறது. இந்த 'தான்' தான் அவனுக்கு லௌகீக பற்றை ஏற்படுத்தி தடுமாற வைக்கிறது. இந்த எண்ணம் தொலைந்தால், எந்த ஒரு செயலுமே செயலற்றதாகி விடும். இது தான் 'செயலில் செயலின்மை' - Inaction in action.
எவன் ஒருவன் வெறுமனே உட்கார்ந்திருந்து, தான் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, தான் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டே இருப்பானோ அவன் நித்யமும் செயலற்ற (பலனற்ற) ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறான். இது தான் 'செயலின்மையான செயல்' - Action in Inaction.

இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொண்டால், பகவான் சொன்னது இங்கே புரியும். ஆரம்பத்தில் நாம் எல்லோருமே இரண்டாவது ஆக சொன்னதைப் போன்றே தான் (Self) என்ற எண்ணத்தால் குழம்பி உள்ளோம். தான் என்ற சிந்தனை என்று தொலைகிறதோ அன்று தான் முதலில் சொன்ன நிலையை அடைய முடியும். நம்முடைய போஜனத்திலேயே இந்த 'தான்' concept இருக்கிறது. ஆரம்பத்தில் சாம்பாரும் அதில் உள்ள தானும் (காயும்) சாப்பிடுகிறோம். எப்படி தான் உள்ள சாம்பார் குழம்பி உள்ளதோ அப்படியே நாமும் உள்ளோம். அடுத்தது ரசம் - தான் (காய்) இல்லாமல் தெளிவாக உள்ளது. இதனால் தான்  சாப்பிடும் காயை 'தான்' என்கிறோமோ என்னவோ? :)

ஸ்ரீ கிருஷ்ணர் நிஷ்காம்யமாக கடமையைச் செய்வதற்கு தன்னையே உதாரணம் காட்டுகிறார். குணம் மற்றும் செய்யும் செயல்களை வைத்து நான்கு வர்ணங்களை பரம்பொருளாகிய அவர் படைத்துள்ளார். ஆனால் இந்த செயலை தான் தான் செய்தோம் என்ற எண்ணம் அவருக்கு இருப்பதில்லை. அதைப் போலவே இந்த செயல்களின் பலன்கள் மேலும் அவருக்கு விருப்பம் இல்லை.  அவரை நன்கு அறிந்தவர்களும், அவரைப் போன்றே இந்த தான் என்ற எண்ணத்தில் சிறைப்பட மாட்டார்கள். ஆதி காலத்தில் இதை அறிந்தவர்கள் இருந்தார்கள். நாளாவட்டத்தில் தர்மத்தில் குறைபாடு அடைய அடைய, இந்த எண்ணங்களும் குறைந்தது. இந்த ஞானத்தை எவர் அடைகிறார்களோ, அவர்களே யோகிகள், உத்தமர்கள்.
 (இந்த வர்ணங்கள் தற்காலத்திய ஜாதி முறை போல பிறப்பினால் வருவதல்ல. ஒருவனுடைய குணம் மற்றும் செயல்களே அதன் காரணி. மனித மனம் இந்த குணங்களைப் பொறுத்தே வேறுபடுகின்றன. இது ஒரு விதமான social division of labor.).

P .S.
இன்று கார்த்திகை மாச சுக்ல பக்ஷ ஏகாதசி - கீதா ஜெயந்தி. முன்பே குறிப்பிட்ட மாதிரி 
http://srinivasgopalan.blogspot.com/2011/06/bhagavath-gita-introduction.html
ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்ததை சஞ்சயன் மூலமாக உலகிற்கு தெரிந்த நாள். இன்று பகவத் கீதை பாராயணம் செய்தால் ஸ்ரேஷ்டம். இந்த நாள் குருவாயூர் ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.