Thursday, December 29, 2011

Chapter 5 - Sannyaasa Yoga [1-10]

1.
அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச சம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோர் ஏகம் தந்மே ப்ரூஹி ஸுநிச்சிதம்
அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா! கர்ம சந்ந்யாசத்தைப் பற்றி புகழ்கிறாய். பின்னர் மீண்டும் கர்ம யோகத்தில் ஈடுபடுவது குறித்து சொல்கிறாய். இந்த இரண்டில் எது சிறந்தது என்று நீ உறுதிபட கூறுவாயாக.

2.
ஸ்ரீ பகவான் உவாச
ஸந்ந்யாஸ: கர்மயோகச்ச நி: ஸ்ரேய ஸகரா வுபௌ
தயோஸ்து கர்ம ஸந்ந்யாஸாத் கர்மயோகோ விசிஷ்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது
ஸந்ந்யாஸமும், கர்ம யோகமும் - இரண்டுமே உயர்வானதொரு ஆனந்தத்தை நோக்கி வழி நடத்தும். ஆனால் இவை இரண்டிலும் கர்ம யோகமானது கர்ம ஸந்ந்யாஸத்தை விட உயர்வானதாகும்.


3.
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர் த்வந்த்வோ ஹி மஹாபஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே
எவன் ஒருவன் எந்த த்வேஷமும், பற்றும் கொள்வதில்லையோ, அவனே நித்ய ஸந்ந்யாஸி என அறியப்படுகிறான். பலம் வாய்ந்த அர்ஜுனா! நேர்மறையான ஜோடிகளில் இருந்து விடுபட்டவனான ஒருவன் எளிதில் பந்தத்தில் இருந்து விடுபடுகிறான்.

4.
ஸாங்க்ய யோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகம் அப்யாஸ்தித: ஸம்யக் உபயோர் விந்ததே ப(फ)லம்  
ஞானமும், கர்ம யோகமும் (செயல்களைச் செய்வது) வேறு எனவும், அவற்றைத் தனியாகவும் குழந்தைகள் தான் பார்ப்பார்கள் - அறிவாளிகள் அல்ல. எவன் ஒருவன் திடமாக இவை இரண்டிலும் எதாவது ஒன்றில் நிலை கொண்டுள்ளானோ, அவன் இந்த இரண்டின் பலன்களையும் பெறுகிறான்.


5.
யத் ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத் யோகைர் அபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி
ஸாங்க்ய யோகத்தைக் கடைப் பிடிப்பவர்கள் எந்த இடத்தைப் பெறுகிறார்களோ, அதே இடத்தை கர்ம யோகிகளும் பெறுகிறார்கள்.  எவன் ஒருவன் ஞானத்தையும், கர்ம யோகத்தையும் ஒன்றாகக் காண்கிறானோ, அவனே (பிரம்மத்தை) கண்டவன்.

6.
ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கம் ஆப்தும் அயோகத:
யோக யுக்தோ முநிர் ப்ரஹ்ம ந சிரேணாதி கச்சதி 
மகா பலம் பொருந்திய அர்ஜுனா! யோகம் என்ற ஒன்று இல்லாமல் ஸந்ந்யாஸம் பெறுவது கடினம். யோகத்தைக் கைவரப் பெற்றவன் பிரம்மத்தை நோக்கி முன்னேறுகிறான்.


7.
யோகயுக்தோ விசுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
ஸர்வ பூதாத்ம பூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே
எவன் (கர்ம) யோகத்தில் பற்று கொண்டுள்ளானோ, எவன் மனம் பவித்ரமாக இருக்கிறதோ, எவன் தன்னை வெற்றி கொண்டுள்ளானோ, எவன் தனது இந்திரியங்களை அடக்கி தன்னுள் இருக்கும் ஆத்மாவே எல்லா உயிர்களிலும் உள்ள ஆத்மா என உணர்நதுள்ளானோ, அவன் செயல்களைச் செய்தாலும் அதனால் அவன் கறைபடாதவனாவான். (அச்செயல்கள் அவனைக் கட்டுப்படுத்தாது.)

8.
நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
பச்யஞ் ஸ்ருண்வந் ஸ்ப்ருசஞ் ஜிக்ரந் நச்நந் க(ग)ச்சந் ஸ்வபஞ் ச்வஸந்
உண்மையை உணர்ந்த ஒரு ஞானி இவ்வாறு எண்ணுவான் - 'நான் ஒன்றும் செய்வது இல்லை'. காண்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, உண்பது, செல்வது, உறங்குவது, சுவாசிப்பது,

9.
ப்ரலபந் விஸ்ருஜந் க்(ग)ருஹ்ணந் நுந்மிஷந் நிமிஷந்நபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்
பேசுவது, விட்டுத் தொலைப்பது, கவர்வது, கண்ணைத் திறப்பது, மூடுவது என்று சகல விஷயங்களிலும் புலன்கள் இந்த்ரியங்களுள்ளே இயங்குகின்றன என்று அவன் அறிவான்.

10.
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேந பத்ம பத்ரம் இவாம்பஸா   
தாமரை இலையில் எப்படி நீர் ஒட்டுவதில்லையோ, அதைப் போல எவன் ஒருவன் தனது கடமைகளைச் செய்து, அவற்றின் மீதான பற்றைத் தொலைத்து, கடமையைப் பிரம்மத்திற்கு அர்ப்பணிப்பனோ அவனைப் பாவம் தீண்டாது.        

விசாரம்
ஆதி சங்கரர் தனது சிஷ்யர்களுடன் காசியில், கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு கோவிலுக்குப் போகும் போது சிவ பெருமான் ஒரு சண்டாள ரூபத்தில் அவர் முன் தோன்றுவார். ஆச்சாரியார் அதை அறியாமல் அந்த சண்டாளனை வழியை விட்டு விலகுமாறு சொல்லும் போது சிவன் அவரிடம், எதை விலகச் சொல்கிறாய் - இந்த உடலையா இல்லை அதனுள் இருக்கும் ஆத்மாவையா? உடல் என்றால் அது அழியக் கூடிய ஒன்று, நிரந்தரம் இல்லாத ஒன்று; ஆத்மா என்றால் அது எல்லோருக்கு உள்ளும் இருப்பது, உனக்குள் இருக்கும் ஆத்மா தான் எனக்குள்ளும், எல்லோருக்குள்ளும் இருக்கிறது.' என்று கூறுவார். ஆதி சங்கரரும் இந்த உண்மையை உணர்ந்து 'மணீஷ பஞ்சகம்' என்ற 5 ஸ்லோகத்தைப் பாடுவார். ஆத்ம ஞானத்தை உணர்த்துவது இது. ஆதி சங்கரர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் அவர் முன்னே சிவனே தோன்றி ஞானத்தை உணர வைத்தார். நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இது சாத்தியம் இல்லையே. நமக்கு சாத்தியமான ஒன்று கீதையில் கூறப்பட்டுள்ளது.

அர்ஜுனனுக்கு கர்ம யோகம் சிறந்ததா இல்லை கர்ம சந்ந்யாச யோகம் சிறந்ததா என்ற சந்தேகம் வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதற்கு பதில் பெறுகிறான். பகவான் சொல்வது என்னவென்றால் இரண்டுமே ஆத்ம ஞானம் என்ற ஒன்றை நோக்கித் தான் ஒருவனைச் செலுத்துகின்றன. கர்ம யோகம் சிறந்ததாக இருந்தாலும் இரண்டிற்கும் இடையே எந்த வித்யாசமும் இல்லை. கர்ம யோகி ஆக இருப்பது முதல் நிலை. முன்பே பார்த்தோம் - யாருமே எப்பொழுதுமே, எதுவுமே செய்யாமல் சும்மா இருக்க முடிவதில்லை. எப்பொழுது ஒரு செயலைச் செய்பவன் மனத் தூய்மை பெற்று, பற்றில்லாமல் தனது செயல்களைச் செய்கிறானோ, அப்பொழுது அவன் மனம் அந்த பிரம்மத்தில் நிலை கொள்கிறது. அவன் மனம் பிரம்மத்தைக் குறித்தே சிந்தித்து, செயல்களைச் செய்யும் போது அவன் செயல்களைச் செய்தாலும் எதுவுமே செய்யாதவனாகவே ஆகிறான் - 'inaction in action'. தன்னைச் சுற்றி நடக்கும் எல்லா செயல்களுக்கும் அவன் வெறுமனே ஒரு பார்வையாளன் ஆகிறான். தனது எல்லாச் செயல்களையும் ஈஸ்வரார்ப்பணம் செய்து, பலன்களை விலக்கி, நிர்மலமான மனதுடன் தன்னை அந்த பிரம்மத்திற்கே சமர்ப்பிக்கின்றான். தனது எல்லா ஆசைகள், பற்றுகள், தான் என்ற எண்ணம் இவற்றை எல்லாம் தொலைக்கும் போது கர்ம சந்நியாச யோகி என்ற நிலையை அவன் அடைகிறான் - பிறப்பற்ற நிலையைப் பெறுகிறான். இந்த கர்ம சந்நியாச நிலையில் அவனுக்கு தன்னுள்ளே இருக்கும் ஆத்மாவே எல்லா உயிர்களிலும் - அது பசுவோ, நாயோ, செடியோ எல்லாவற்றிலும் ஆத்மாவாக இருப்பதை உணர்கிறான். இது தான் Self Realization. நித்திய ஆனந்த நிலையில் இருக்கும் இவனுக்கு எந்த விதமான சுகமோ, துக்கமோ, ஆசையோ, வருத்தமோ கிடையாது.














Wednesday, December 21, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [31 - 42]

31.
யஜ்ஞசிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரம்ஹ ஸநாதாநம் 
நாயம் லோகோ(அ)ஸ்த்ய யஜ்ஞஸ்ய குதோ(அ)ந்ய: குருஸத்தம
யஜ்ஞத்தில் படைக்கப்பட்டது போக அமிர்தம் போன்ற மீதியை (இன்னொரு அர்த்தம் நைவேத்யம் செய்யப்பட்டது) உண்பவன் அந்த பிரம்மத்தை அடைகிறான். யாகம் எதையுமே செய்யாதவன் இந்த இல் உலகிற்கே தகுதி இல்லாதவன். பின்னர் எப்படி அர்ஜுனா! அவனால் இன்னொரு உலகை அடைய முடியும்.

32.
ஏவம் பஹூவிதா யஜ்ஞா விததா ப்ரம்ஹணோ முகே
கர்மஜாந் வித்திதாந் ஸர்வாந் ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே
இப்படியாக பல விதமான படையல்கள் அந்த பிரம்மத்தின் முன்னே பரப்பி வைக்கப் பட்டுள்ளன. இவை எல்லாமே கர்மம் என்ற ஒன்றினாலேயே தோன்றி உள்ளன. இதை அறிந்ததால் நீ விடு பெற முடியும்.

33.
ஸ்ரேயாந் திரவ்யமயாத் யஜ்ஞாஜ் ஜ்ஞாந யஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே 
பரந்தபா! பொருட்களால் யஜ்ஞம் செய்வதைவிட ஞானத்தால் செய்வது சிறந்தது. அர்ஜுனா! எல்லா செயல்களும் முற்றிலுமாக ஞானத்திலேயே முற்று பெறுகின்றன.  

34.
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்சிந:
இந்த பிரம்மத்தை உணர்ந்த சான்றோர்களை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதன் மூலமும், கேள்வி கேட்பதன் மூலமும், அவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவர்கள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்.

35.
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹம் ஏவம் யாஸ்யஸி பாண்டவ
யேந பூதாந்ய சேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி
அர்ஜுனா! அதை அறிந்ததன் மூலம் நீ மீண்டும் இது போல கலங்கி இருக்க மாட்டாய். அதன் மூலம் நீ எல்லா உயிர்களையும் உன்னுள்ளும், என்னுள்ளும் காண்பாய்.

36.
அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
ஸர்வம் ஜ்ஞாநப்லவே நைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி
நீ பாபிகளிலும் மகாபாபியாக இருந்தாலும், இந்த ஞானத்தின் மூலம் நீ எல்லா பாவங்களையும் தொலைத்து விடலாம்.

37.
யதைதாம்ஸி ஸமித்தோ(அ)க்நிர் பஸ்மஸாத் குருதே(அ)ர்ஜுந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா
அர்ஜுனா! அக்னியானது எப்படி ஸமித்துக்களை (யஜ்ஞத்தில் பயன்படும் ஸமித்துக்கள்) பஸ்பம் ஆக்குகிறதோ, அப்படியே ஞானம் ஆகிய அக்னி எல்லா செயல்களையும் பஸ்பம் ஆக்குகிறது.

38.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே
தத் ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி
இந்த உலகில் ஞானத்தைப் போன்று வேறு பவித்ரமான பொருள் ஒன்றில்லை.யோகத்தில் எவன் தேர்ந்துள்ளானோ, அவன் தகுந்த சமயத்தில் அந்த ஞானத்தைப் பிரம்மத்தில் காண்பான்.

39.
ஸ்ரத்தாவாந்ல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஷாந்திமசிரேணாதி கச்சதி
எவன் ஒருவன் முழு ஷ்ரத்தையுடன், பக்தியுடன், புலன்களை அடக்கி இருக்கிறானோ அவன் இந்த ஞானத்தைப் பெறுகிறான். அந்த ஞானத்தை பெற்ற உடன் அவன் உடனே அந்த சித்தானந்த நிலையாகிய பரம சாந்தியைப் பெறுகிறான்.

40.
அஜ்ஞச் சாஸ்ரத் ததாநச்ச ஸம்சயாத்மா விநச்யதி
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்சயாத்மாந:    
அறிவீனர்கள், பக்தி இல்லாதவர்கள், சந்தேகம் கொண்டவர்கள், அழிவை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களுக்கு இந்த உலகும் இல்லை, மறு உலகும் இல்லை. இப்படி சந்தேகப்படுபவர்களுக்கு மனதில் எந்த சுகமும் இருப்பதில்லை.

41.
யோக ஸந்ந்யஸ்த கர்மாணம் ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்சயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய
அர்ஜுனா! எவன் ஒருவன் யோகத்தினால் கடமையில் இருந்து சந்ந்யாசம் (விடு) பெறுகிறானோ, எவனது சந்தேகங்கள் ஞானத்தினால் அழிக்கப்பட்டு விட்டதோ, எவன் தன்னை தானே வெற்றி கொள்கிறானோ - அவனைச் செயல்கள் கட்டுபடுத்துவதில்லை.

42.
தஸ்மாத் அஜ்ஞாந ஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிந ஆத்மந:
சித்த்வைநம் ஸம்சயம் யோகம் ஆதிஷ்டோத்திஷ்ட பாரத
அர்ஜுனா! ஆகையால் பிரம்மத்தைப் பற்றிய ஞானம் என்ற வாளைக் கொண்டு, உன் மனதில் உள்ள அறியாமையால் விளைந்த உனது சந்தேகங்களை வெட்டி, யோகத்தில் சரண் அடை. எழுச்சி பெறு.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஜ்ஞாநகர்மஸந்ந்யாஸயோகோ நாம சதுர்தோ (அ)த்யாய:  
       
விசாரம்
பாகத புராணத்தில் அஜமிளா என்ற ஒரு பாத்திரம் வரும். பிராமண குலத்தில் பிறந்தவன் தான் இவன். ஒரு சமயம் தாசி ஒருத்தியைக் கண்டு, அவளை மோஹித்து தனது நித்ய கர்மாக்களை மறந்து அவளுடனே சிற்றின்பத்தில் மூழ்கி இருப்பான். அவனது காலம் முடியும் நேரம் வரும் போது எம தூதர்கள் வருவார்கள். அவன் அச்சமயத்தில் நாராயணன் என்ற பெயர் கொண்ட தனது பிள்ளையை அழைப்பான். உடனே வைகுண்டத்தில் இருந்து விஷ்ணு தூதர்கள் வந்து அவனை எம தூதர்களிடம் இருந்து மீட்பார்கள். அச்சமயத்தில் அவனுக்கு ஞானம் வரும் - நாராயணா என்ற நாமத்தை உச்சரித்ததற்கே இந்த பலன் என்றால் முழுவதும் ஈஸ்வர உபாசனை செய்தால் எப்படிப்பட்ட பலன் கிடைத்திருக்கும் என்று எண்ணிப் பார்த்து, பின்னர் காசி சென்று தவம் செய்து மோக்ஷம் பெறுவான். அவன் முன்பு செய்த நற் செயல்கள் அவனுக்கு தகுந்த நேரத்தில் ஞானத்தைக் கொடுத்தது. மகா பாபி ஆக இருந்தும் அதைப் போக்கி அவனுக்கு மோக்ஷம் கிடைத்தது.

நமக்கும் இப்படித் தான். யாகத்தில் சமர்பிக்கப்படும் ஸமித்துக் கட்டைகள் எப்படி நெருப்பில் பஸ்பம் ஆகிறதோ அப்படியே மனதில் இந்த ஞானம் உதித்த க்ஷணத்தில் நமது கர்மாக்கள் எரிந்து விடுகின்றன. முன்பே பார்த்தோம் - தான் என்ற எண்ணம் மனதில் அழிந்தால் தான் கர்ம பலனில் இருந்து விடு பெற முடியும். மனதில் ஞானம் வரும் போது தான் கர்ம சந்ந்யாசம் அடையலாம்.

இந்த ஞானம் பெறுவதற்கு மனதில் சிரத்தையும், பக்தியும் அவசியம். மனதில் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். குமாரில பட்டரை இங்கே குறிப்பிட வேண்டியது வருகிறது. அவரை பௌத்தர்கள் மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிய போது, தான் கற்ற வேத சாஸ்திரம் உண்மையானால் தன்னைக் காப்பாற்றும் என்று கூறினார். அவர் மனதில் அந்த இம்மியளவு சந்தேகம் இருந்ததால் தான் அவர் உயிர் பிழைத்தும் கண் பார்வை போயிற்று.  

வெறும் ஏட்டறிவு ஞானத்தைக் கொடுக்காது. பஜ கோவிந்தத்தில் ஆச்சார்யாள் சொல்ற மாதிரி வெறும் இலக்கண அறிவு இறுதியில் பயன் படாது. ஒருவன் முதலில் தன்னைக் கட்டுப்படுத்தியவனாகவும், பக்தி மற்றும் நம்பிக்கையுடன் இருக்கும் போது தான் அந்த ஆத்ம ஞானம் அவனுள் வரும். அப்படி நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அழிவு தான் வரும். கற்று உணர்ந்த குருவிடம் பணிவுடன், இந்த நம்பிக்கை, பக்தியுடன் கற்றால் தான் அந்த ஆத்ம ஞானம் பெற்று கர்மத்தில் இருந்து விடு பட முடியும்.

Wednesday, December 14, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [21-30]

21.
நிராசீர்யத சித்தாத்மா த்யக்த ஸர்வ பரிக்ரஹ:
சாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்
எந்த ஆசையும் இல்லாமல், மன, உடல் கட்டுப்பாட்டுடன், பேராசையை தொலைத்து, வெறும் சரீர செயலை மட்டுமே செய்வதால், அவன் எந்த பாவத்தையும் சேர்ப்பதில்லை.

22.
யத்ருச்சாலாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:    
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே
பெரு முயற்சி எதுவும் இல்லாமல் தனக்கு எது கிடைக்கின்றதோ அதில் திருப்தி பட்டுக் கொண்டு, எதிர்மறை ஜோடிகள்(முன்பே பார்த்தோம்), பொறாமை இவற்றில் இருந்து விடுபட்டு, வெற்றி/தோல்வி இரண்டையும் சமமாக மனதில் பாவித்து இருப்பதால், அவன் செயல்பட்டாலும் அந்த செயல்களால் அவன் கட்டுப்படாதவன் ஆகிறான்.


23.
க(ग)த ஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநா வஸ்தித சேதஸ:   
யஜ்ஞாயா சரத: கர்ம ஸமக்ரம் பிரவிலீயதே
பற்றில்லாமல் இருப்பவனுக்கு, விடுபட்டவனுக்கு, எவன் மனது ஞானத்தில் நிலை கொண்டுள்ளதோ, எல்லாச் செயல்களையும் ஈஸ்வர அர்ப்பணம் என்றே செய்கிறானோ - அவனுக்கு எல்லா காரியங்களும் நழுவி விடுகின்றன (அந்த செயல்களால் அவனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை).

24.
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேந க(ग)ந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா 
பிரம்மத்திற்கு அர்ப்பணமாக, பிரம்ம ஹவிர் என்ற பிரம்மம் ஆகிய உருக்கிய நெய்யை, ஹோமத்தில் பிரம்மமாகிய அக்னிக்கு சமர்ப்பிப்பவன், தனது செயல்களில் பிரம்மத்தைக் காண்பவன் எவனோ - அவன் பிரம்மத்தை நிச்சயம் அடைவான். (தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும், எல்லா செயல்களிலும் பிரம்மத்தைக் காண்பவன் பிரம்மத்தை நிச்சயம் அடைவான்).

25.
தைவம் ஏவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோ பஜூஹ்வதி
சில யோகிகள் கடவுளுக்கு வெறுமனே படையல் மட்டும் வைக்கிறார்கள். பிரம்மத்தைப் புரிந்த மற்றவர்கள், பிரம்மம் ஆகிய அக்னியில் பிரம்மத்தையே பிரம்மத்திற்கு படைக்கிறார்கள்.

26.
ஸ்ரோத்ராதீந் ஈந்த்ரியாண் யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
சப்தாதீந் விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி 
சிலர் செவி முதலான புலன்களை அடக்குவதன் மூலம், அந்த அக்னிக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள். மற்றவர்கள் சப்தம் (மந்திர உச்சாடனம்) மற்றும் பிற இந்த்ரிய பொருட்கள் மூலமாக அந்த இந்த்ரிய அக்னிக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

27.
ஸர்வாணீந்த்ரிய கர்மாணி ப்ராண கர்மாணி சாபரே
ஆத்ம ஸம்யமயோகா(ग)க்(ग)நௌ ஜுஹ்வதி ஜ்ஞாந தீபிதே
மற்றும் சிலர் புலன்களின் எல்லா செயல்களையும், ப்ராண சக்தியையும் ஞானத்தால் பற்ற வைக்கப் பட்ட அந்த சுய கட்டுப்பாட்டு யோகம் என்ற அக்னியில் அர்ப்பணிக்கிறார்கள்.

28.
த்ரவ்ய யஜ்ஞாஸ் தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யா யஜ்ஞாந யஜ்ஞாச்ச யதய: ஸம்சித வ்ரதா:
சிலர் செல்வங்களையும், தவத்தையும், யோகத்தையும் அர்ப்பணிக்கிறார்கள். சுய கட்டுப்பாடு மற்றும் கடுமையான அனுஷ்டானங்களை அனுசரிக்கும்
முனிவர்கள் வேத பாராயணம் மற்றும் அறிவை அர்ப்பணிக்கிறார்கள்.

29.
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே(அ)பாநம் ததாபரே
ப்ராணாபாநக(ग)தீ ருத்த்வா ப்ராணாயாம பராயணா
மற்றும் சிலர் மூச்சை உள் இழுப்பதிலும், சிலர் மூச்சை வெளி இடுவதிலும், சிலர் மூச்சை அடக்குவதிலும் (பிராணாயாமம்) தங்களின் அர்ப்பணிப்பைச் செய்கிறார்கள்.

30.
அபரே நியதா ஹாரா: ப்ராணாந் ப்ராணேஷு ஜுஹ்வதி 
ஸர்வே(அ)ப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞஷபித கல்மஷா:     
சிலர் தங்களின் ஆகாரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், உயிர்களுக்கெல்லாம் உயிர் மூச்சை அளிக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே யஜ்ஞத்தை அறிந்தவர்கள். இவர்களின் எல்லா பாவங்களும் அந்த யக்னத்தில் அழிந்து விடுகிறது.

விசாரம்
ஈஸ்வரனை அடைய எண்ணுபவர்கள் பல்வேறு விதத்தில் தங்களின் அர்பணிப்பைச் செய்கிறார்கள். செல்வந்தர்கள் செல்வத்தாலும் (கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது), ஞானிகள் தங்கள் ஞானத்தாலும் (உபன்யாசம் செய்வது), சிலர் புலன் அடக்கி தியானம் செய்தும், சிலர் அந்த புலன் மூலமாகவே ஈஸ்வரனைப் புகழ்ந்து பேசியும், பாடியும் அந்த அர்பணிப்பைச் செய்கிறார்கள். இவர்கள் எல்லோருடைய நோக்கமும் அதன் மூலம் அந்த இறைவனை அடைவது. அந்த அர்ப்பணங்கள் மூலம் அவர்கள் மனம் சுத்தம் அடைந்து, பலன்களில் பற்று விலக்கப்படும் போது அந்த மனம் ஆன்மீகப் பாதையில் செல்கிறது. ஞானம் என்ற ஒன்றை அடைய நினைக்கிறது.

ஞானத்தைப் பெறுவதற்கு ஒரு குரு - ஆசிரியர் அவசியம். அவரைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.
அந்த குரு பிரம்மத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும். இது தான் அவருக்கு இருக்க வேண்டிய தகுதி.
குருவைத் தேடித் போகும் சீடனும் பக்தியுடன், பணிவுடன் செல்ல வேண்டும்.  இது சீடனுக்கு இருக்க வேண்டிய தகுதி.
பகவான் எந்த வழியில் பக்தர்கள் அவரை அடைய நினைத்தாலும், அவர்களை ஏற்றுக் கொள்கிறார்.  பகவான் இப்படிப்பட்ட குரு ரூபத்தில் அவனுக்கு ஞானத்தைப் போதிக்கிறார். இதன் மூலம் அவன் மனதில் உள்ள அறியாமை தொலைகிறது, ஞானம் வருகிறது.

ஞானம் பெற்றவன் எல்லா உயிர்களிலும் பிரம்மத்தைக் காண்கிறான். கடவுளும் பிரம்மம் தான், அற்பப் புல்லும் பிரம்மம் தான். அந்த புல்லும் அவனுக்கு பகவானாகத் தான் தெரியும். அவனும் பிரம்மம், சர்வமும் பிரம்மம்.
இந்த ஞானத்தைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட பாபி ஆக இருந்திருந்தாலும், அவனது பாவங்கள் எல்லாம் தொலைக்கின்றான். எப்படி ஒரு விறகு தீயினால் எரிக்கப்படுகிறதோ, அதைப் போல அவனது எல்லாச் செயல்களும் அந்த ஞானம் ஆகிய அக்னியில் எரிக்கப் பட்டு விடுகிறது.  

PS
வரும் 16 ம் தேதி முதல் மார்கழி மாதம். கீதையில் சொன்ன மாதிரி மாதங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் மார்கழியாக இருக்கிறார். தேவர்களுக்கு இந்த மாதம் ஒரு நாளின் ப்ரஹ்ம முஹூர்த்தத்தைப் போன்றது. ஒரு நாளுக்கு சுமாராக அதிகாலை 4 : 3௦ - 6 : ௦௦ வரை உள்ள சமயம் ப்ரஹ்ம முஹூர்த்தம். ப்ரஹ்ம முஹூர்த்தம் போது செய்யும் பூஜைகளுக்கு பலன் அதிகம். எனவே தான் மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த மார்கழி மாதத்தில் தெய்வ உபாசனை மட்டுமே செய்கிறோம். 

Monday, December 5, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [11-20]

11.
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச: 
எந்த வழியில் மக்கள் என்னை அணுகினாலும், அப்பொழுதும் நான் அவர்களுக்கு அநுக்ரஹிப்பேன். அர்ஜுனா! என் பாதையை எல்லா வழியிலும் மக்கள் தொடர்கிறார்கள்.

12.
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர் பவதி கர்மஜா
இந்த உலகில், தங்கள் செயலில் வெற்றி பெற விரும்புபவர்கள், இறைவனுக்கு படையல் இடுகிறார்கள். ஏனென்றால் வெற்றி என்பது மனிதர்களுக்கு செயலின் மூலமே விரைவில் கிடைக்கின்றது.

13.
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்ய கர்தாரம் அவ்யயம்
குணம் மற்றும் செயலைப் பொருத்து - அதன் அடிப்படையில் நான்கு வித வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டன. நான் தான் அதன் கர்த்தா என்றாலும், என்னை நீ செயல் புரியாதவனாகவும், அழிக்க முடியாதவனாகவுமே அறிந்து கொள்.

14.
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம ப(फ)லே ஸ்ப்ருஹா:  
இதி மாம் யோ(அ)பி ஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே
செயல்கள் என்னைக் கட்டுப்படுத்தாது. அதைப் போல எனக்கு அந்த செயல்களின் பலன்களிலும் பற்று இல்லை. என்னை இவ்வாறு அறிந்தவனும் அவ்வாறே செயல்களால் கட்டுப்படாதவன் ஆகிறான்.

15.
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்
இதை அறிந்தே பண்டைய காலத்தில் மோக்ஷத்தை விரும்பியவர்களும், கடமையைச் செய்தார்கள். ஆகையால் நீயும் பண்டைய காலத்தின் முன்னோர்கள் போல உன் கடமையைச் செய்.

16.
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ(அ)ப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம பிரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)சுபாத்
எது செயல்? எது செயலின்மை? இதைக் குறித்து அறிவாளிகளும் குழம்பிப் போய் உள்ளார்கள். ஆகையால் நான் உனக்கு அந்த செயல்/செயலின்மை குறித்த விளக்கத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன். இதை அறிவதன் மூலம் நீ சம்சாரச் சுழலாகிய ஜனனம்/மரணம் என்ற கொடுமையில் இருந்து விடுதலை பெறலாம்.

17.
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணச்ச போத்தவ்யம் க(ग)ஹநா கர்மணோ க(ग)தி:
சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயலின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே செய்யக் கூடாத செயல் பற்றியும், செயலின்மையைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். செயலைப் பற்றிய அர்த்தத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினமே.

18.
கர்மண்யகர்ம ய: பச்யேத் அகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமாந் மனுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்ந கர்மக்ருத்
எவன் ஒருவன் செயலில் செயலின்மையைக் காண்கிறானோ, செயலின்மையில் செயலைக் காண்கிறானோ, அவனே மனிதர்களில் சிறந்தவன், யோகி, எல்லாச் செயல்களையும் செய்பவன்.

19.
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா(भा): காம ஸங்கல்ப வர்ஜிதா:
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹூ: பண்டிதம் புதா: 
எவன் ஒருவனது செயல்கள் ஆசை மற்றும் சுயநலம் இன்றி உள்ளதோ, எவனது செயல்கள் ஞானம் என்ற அக்னியால் புடம் போடப்பட்டுளதோ - அவனையே சான்றோர்கள் பண்டிதன் என்பார்கள்.


20.
த்யக்த்வா கர்ம ப(फ)லா ஸங்கம் நித்ய த்ருப்தோ நிராச்ரய:  
கர்மண்ய பிப்ர வ்ருத்தோ(அ)பி நைவ கிஞ்சித் கரோதி ஸ:
கடமையின் பலன் மீது உள்ள பற்றை விட்டவன், எப்பொழுதும் திருப்தியுடன், எதன் மீதும் சார்ந்து இல்லாமல் இருப்பவன், செயலில் ஈடுபட்டிருந்தாலும் அவன் எதுவும் செய்யாதவனாகிறான்.

விசாரம்
ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதைப் போன்று இந்த செயல்/செயலின்மையைப் புரிந்து கொள்வது கொஞ்சம் குழப்பமானது தான்.
எவன் ஒருவன் பற்றில்லாமல் தன் காரியங்களைச் செய்கிறானோ (நிஷ்காம்ய கர்மா), எவன் அந்த செயல்களின் பலன்கள் மீது ஒரு பற்றில்லாமல் இருக்கிறானோ, அவனுடைய மனதில் தான் தான் அந்த செயல்களின் கர்த்தா என்ற எண்ணம் தொலைந்து விடுகிறது. இந்த 'தான்' தான் அவனுக்கு லௌகீக பற்றை ஏற்படுத்தி தடுமாற வைக்கிறது. இந்த எண்ணம் தொலைந்தால், எந்த ஒரு செயலுமே செயலற்றதாகி விடும். இது தான் 'செயலில் செயலின்மை' - Inaction in action.
எவன் ஒருவன் வெறுமனே உட்கார்ந்திருந்து, தான் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, தான் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டே இருப்பானோ அவன் நித்யமும் செயலற்ற (பலனற்ற) ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறான். இது தான் 'செயலின்மையான செயல்' - Action in Inaction.

இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொண்டால், பகவான் சொன்னது இங்கே புரியும். ஆரம்பத்தில் நாம் எல்லோருமே இரண்டாவது ஆக சொன்னதைப் போன்றே தான் (Self) என்ற எண்ணத்தால் குழம்பி உள்ளோம். தான் என்ற சிந்தனை என்று தொலைகிறதோ அன்று தான் முதலில் சொன்ன நிலையை அடைய முடியும். நம்முடைய போஜனத்திலேயே இந்த 'தான்' concept இருக்கிறது. ஆரம்பத்தில் சாம்பாரும் அதில் உள்ள தானும் (காயும்) சாப்பிடுகிறோம். எப்படி தான் உள்ள சாம்பார் குழம்பி உள்ளதோ அப்படியே நாமும் உள்ளோம். அடுத்தது ரசம் - தான் (காய்) இல்லாமல் தெளிவாக உள்ளது. இதனால் தான்  சாப்பிடும் காயை 'தான்' என்கிறோமோ என்னவோ? :)

ஸ்ரீ கிருஷ்ணர் நிஷ்காம்யமாக கடமையைச் செய்வதற்கு தன்னையே உதாரணம் காட்டுகிறார். குணம் மற்றும் செய்யும் செயல்களை வைத்து நான்கு வர்ணங்களை பரம்பொருளாகிய அவர் படைத்துள்ளார். ஆனால் இந்த செயலை தான் தான் செய்தோம் என்ற எண்ணம் அவருக்கு இருப்பதில்லை. அதைப் போலவே இந்த செயல்களின் பலன்கள் மேலும் அவருக்கு விருப்பம் இல்லை.  அவரை நன்கு அறிந்தவர்களும், அவரைப் போன்றே இந்த தான் என்ற எண்ணத்தில் சிறைப்பட மாட்டார்கள். ஆதி காலத்தில் இதை அறிந்தவர்கள் இருந்தார்கள். நாளாவட்டத்தில் தர்மத்தில் குறைபாடு அடைய அடைய, இந்த எண்ணங்களும் குறைந்தது. இந்த ஞானத்தை எவர் அடைகிறார்களோ, அவர்களே யோகிகள், உத்தமர்கள்.
 (இந்த வர்ணங்கள் தற்காலத்திய ஜாதி முறை போல பிறப்பினால் வருவதல்ல. ஒருவனுடைய குணம் மற்றும் செயல்களே அதன் காரணி. மனித மனம் இந்த குணங்களைப் பொறுத்தே வேறுபடுகின்றன. இது ஒரு விதமான social division of labor.).

P .S.
இன்று கார்த்திகை மாச சுக்ல பக்ஷ ஏகாதசி - கீதா ஜெயந்தி. முன்பே குறிப்பிட்ட மாதிரி 
http://srinivasgopalan.blogspot.com/2011/06/bhagavath-gita-introduction.html
ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்ததை சஞ்சயன் மூலமாக உலகிற்கு தெரிந்த நாள். இன்று பகவத் கீதை பாராயணம் செய்தால் ஸ்ரேஷ்டம். இந்த நாள் குருவாயூர் ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

Saturday, November 26, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [1-10]

1.
ஸ்ரீ பகவான் உவாச:
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாந் அஹம் அவ்யயம்
விவஸ்வாந் மநவே ப்ராஹம் அநுர் இக்ஷ்வாகவே(அ)ப்ரவீத்
ஸ்ரீ பகவான் சொன்னது:
அழிவில்லாத இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு கற்றுக் கொடுத்தேன். அவன் அதை மனுவிற்கு கற்றுக் கொடுத்தான். மனு அது இக்ஷ்வாகுவிற்கு கற்றுக் கொடுத்தான்.

2.
ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:
ஸகாலே நேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப
இதை, வழி வழியாக வழங்கப் பட்டு வந்ததை ராஜ ரிஷிகளும் அறிவார்கள். எதிரிகளை அழிப்பவனே (பரந்தபா) ! இந்த யோகம் ஒரு நீண்ட காலமாக இங்கே தொலைந்து போய் உள்ளது.

3.
ஸ ஏவாயம் மயா தே(அ)த்ய யோக: ப்ரோக்த: புராதந: 
பக்தோ(அ)ஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேதத் உத்தமம் 
அதே, பரம ரகஸ்யமான புராதன யோகத்தை உனக்கு நான் இன்று கற்றுக் கொடுத்துள்ளேன். ஏனென்றால் நீ எனது பக்தன் மற்றும் நண்பன்.

4.
அர்ஜுன உவாச:
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
கதம் ஏதத் விஜாநீயாம் த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி
அர்ஜுனன் சொன்னது:
உனது பிறப்போ பிந்தையது. அதற்கு முந்தய பிறப்பு சூர்யக் கடவுளான விவஸ்வான் உடையது. நீ இதை அவருக்கு ஆரம்பத்தில் கற்றுக் கொடுத்தாய் என்பதை நான் எப்படி புரிந்து கொள்ள முடியும்.

5.
ஸ்ரீ பகவான் உவாச:
பஹூநிமே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப
ஸ்ரீ பகவான் சொன்னது:
அர்ஜுனா! எனது, மற்றும் உனது பல பிறப்புகள் கடந்து விட்டன. பரந்தபா! நான் அவை எல்லாவற்றையும் அறிவேன், ஆனால் நீ அறிய மாட்டாய்.

6.
அஜோ(அ)பி ஸந்நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோ(அ)பி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா
நான் பிறப்பற்றவனாக (அநாதி), அழிவற்றவனாக இருந்தாலும், எல்லா உயிர்களுக்கும் அதிபதியாக இருந்தாலும், இயற்கை விதியை என் ஆளுகையில் கொண்டு நான் எனது மாயையினால் பிறக்கின்றேன்.

7.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத
அப்யுக்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம் யஹம்   
எங்கெல்லாம் தர்மத்தில் குறைபாடு உண்டாகின்றதோ, எங்கெல்லாம் அதர்மத்தின் உயர்வு ஏற்படுகின்றதோ, அர்ஜுனா! அங்கெல்லாம் நான் அவதாரிக்கின்றேன்.

8.
பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் 
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
தர்மத்தை பரிபாலனம் செய்யும் நல்லவர்களை ரட்சிக்க, கொடியவர்களை அழிக்க, தர்மத்தை ஸம்ஸ்தாபிக்க (ஆழமாக வேரூன்ற), நான் யுகம், யுகமாக தோன்றுகிறேன்.

9.
ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ(அ)ர்ஜுந
எனது தெய்வீக பிறப்பு, மற்றும் செயல்களை அதன் உண்மையான வடிவில் அவன் அறிகிறானோ, அவன் இந்த உடலைத் துறந்த பின்னால் மீண்டும் பிறப்பதில்லை. அர்ஜுனா! அவன் என்னிடம் வருகின்றான்.

10.
வீத ராக பய க்ரோதா மந்மயா மாம் உபாச்ரிதா:
பஹவோ ஜ்ஞாந தபஸா பூதா மத்பாவம் ஆகதா:
பற்று, பயம், குரோதம் இவற்றைத் துறந்து, என்னுள் ஆழ்ந்து (என் நினைவாகவே இருந்து), என்னைச் சரண் அடைந்து, ஞானம் என்னும் அக்னியில் புனிதம் அடைந்து, அதிகமானவர்கள் என்னை அடைந்துள்ளார்கள்.

விசாரம்
எல்லாருக்கும் தோன்றக் கூடிய சந்தேகம் இங்கே அர்ஜுனனுக்கும் தோன்றி உள்ளது. அர்ஜுனனும், கிருஷ்ணரும் சம காலத்தியவர், நண்பர்கள், உறவினர்கள் எல்லாம். நம்முடைய நெருங்கிய நண்பர் ஒருவர், நான் தான் பெரிய ஞானி, சூர்ய, சந்திரர்களுக்கெல்லாம் நான் தான் ஞானம் கற்றுக் கொடுத்தேன் என்றால் நாம் உடனே நம்புவோமா என்ன? இங்கும் அது போலவே அர்ஜுனன் சந்தேகம் கொள்கிறான். ஸ்ரீ கிருஷ்ணரும், அதைப் போக்குகிறார். தனது எல்லா பிறப்புகளும், தனது நினைவில் உள்ளதாகவும், அதுவே அர்ஜுனனுக்கு இல்லை என்றும் கூறுகிறார். இந்த ஞானம் கடந்து வந்த பாதை, பரம்பொருளில் இருந்து, சூரியனுக்கு, அவனில் இருந்து மனுவிற்கு, மனுவில் இருந்து இக்ஷ்வாகுவிற்கு. அர்ஜுனன் இந்த இக்ஷ்வாகு குலத்தில் தான் பிறந்தவன். நடுவில் பல காலம் விட்டுப் போயிருந்த இந்த ஞானத்தை மீண்டும் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.

 பரம்பொருளான அந்த புருஷர், இயற்கை விதியை மீறாமல், அநாதியாக (ஆரம்பமே இல்லாதவராக இருந்தும்), அழிவில்லாதவராக (இறுதி இல்லதவராக இருந்தும்) மாயையினால் இங்கு அவதாரம் செய்வதற்கான காரணங்களைக் கூறுகிறார். இந்த இரண்டு ஸ்லோகங்களையும் (7  - 8 ) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பாராயணம் செய்யும் ஒன்று தான். எங்கெல்லாம் தர்மத்திற்கு குறைபாடு ஏற்படுகிறதோ, அதர்மம் தழைக்கிறதோ, அங்கெல்லாம் அவரின் அவதாரம் நடக்கிறது. தர்மப் படி நடப்பவர்களை ரட்சிக்க, அதர்மம் செய்யும் துஷ்டர்களை அழிக்க, தர்மத்தை மேலும் வேரூன்ற வைக்க யுகம் யுகமாக தான் வருவதாகக் கூறுகிறார்.
இதில் ஸம்ஸ்தாபனம் என்ற சொல் முக்கியமானது. ஸ்தாபனம் என்றால் foundation. ஆரம்பத்தில் செய்வது. தர்மம் ஆரம்பத்தில் தோன்றியது தான். ஆனால் நாளாவட்டத்தில், அது குறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டடத்தில் natural wear and tear காரணமாக சில குறைப்பாடுகள் ஏற்படும் போது அதை பழுது பார்க்கிறோம் - அது மாதிரி இங்கே தர்மத்திற்கும் ஒரு overhaul தேவைப் படுகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் மீண்டும் தர்மத்தை வேரூன்ற, ஆழமாக ஸ்தாபிக்க வேண்டி உள்ளது, அந்த ஆழமான ஸ்தாபனம் தான் ஸம்ஸ்தாபனம்.
இப்படி மீண்டும், மீண்டும் ஸம்ஸ்தாபனம் செய்யத் தான் அவரும் தசாவதாரமும் செய்ய வேண்டி வந்தது.
தசாவதாரத்தில் உள்ள எல்லா அவதாரத்திலும் இந்த 3 condition களும் நிறைவேறுவதைப் பார்க்கலாம்.
மச்சம் - பிரளயத்தில், நல்லவர்களை ரட்சிக்க, கேட்டவர்களை அழிக்க
கூர்மம் - பாற்கடலைக் கடையும் போது, தேவர்களை ரட்சிக்க, அசுரர்களை அழிக்க
வராகம் - பூமாதேவியைக் கவர்ந்து சென்ற ஹிரண்யாக்ஷனை அழிக்க, பூமாதேவியை ரட்சிக்க
நரசிம்ஹம் - பிரஹலாதனை ரட்சிக்க, ஹிரண்யகசிபுவை அழிக்க, ப்ரஹலாதனை ரட்சிக்க
வாமனம் - இங்கே அழிப்பதற்கு பதிலாக மோக்ஷம் அளிக்க என்று கொள்ளலாம் - மகாபலி சக்ரவர்த்திக்கு மோக்ஷம் அளித்து, அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பியது
பரசுராமர் - 21 தலைமுறை ஷத்ரிய அரசர்களை அழித்தது
ராமர் - ராவணனை வதம் செய்தது, சீதையைக் காப்பாற்றியது
பலராமர் - க்ருஷ்ணரோடு செய்த தர்ம ரக்ஷணம்
கிருஷ்ணர் - பல அசுரர்களை அழித்தது, பாண்டவர்களைக்  காப்பற்றியது
கல்கி - கலியுகத்தில் மீண்டும் தர்ம ஸம்ஸ்தாபனம்.


இந்த உண்மையைப் புரிந்தவர்கள், மனதில் அந்த பரம்பொருள் ஒன்றைக் குறித்தே த்யானத்தில் இருப்பவர்கள். பந்தபாசம், பயம், குரோதம் இவற்றை விட்டு, ஞானம் பெற்று அந்த பகவானை இவர்கள் சரண் அடையும் போது, அவர்களுக்கு மறு பிறப்பு என்ற ஒரு நிலை இல்லாத மோக்ஷம் கிடைக்கின்றது.  இதுவே இறைவனை அடையும் வழியும் ஆகும்.

Tuesday, November 1, 2011

Chapter 3 - Karma Yoga [31-43]

31.
யே மே மதம் இதம் நித்யம் அனுஷ்டந்தி மாநவா:
ஷ்ரத்தாவந்தோ(அ)நஸூயந்தோ முச்யந்தே தே(அ)பி கர்மபி:
எவர்கள் எனது இந்த அறிவுரையை தினமும் ஷ்ரத்தையுடன், எந்த தடுமாற்றமும் இல்லாமல் அனுஷ்டிக்கிறார்களோ அவர்களும் கர்மத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

32.
யே த்வேதத் அப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வஜ் ஞாந விமூடாம்ஸ்தாந் வித்தி நஷ்டாந் அசேதஸ: 
ஆனால் எவர்கள் எனது அறிவுரையில் நம்பிக்கை இல்லாமல், அதைக் கடைப்பிடிக்காமல், எல்லா ஞானத்திலும் சூன்யமாக (மயக்கத்தில்) இருந்து, பகுத்தறிய முடியாதவர்களாக இருப்பார்களோ, அவர்கள் அழியவே விதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவாயாக.

33.
ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: பிரக்ருதேர் ஞாநவாந் அபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி
சான்றோனும் இயற்கையின் பிரகாரமே நடந்து கொள்கிறான். எல்லா உயிர்களும் அந்த இயற்கையின் பிரகாரமே நடந்து கொள்கின்றன. கட்டுபாட்டால் என்ன செய்ய முடியும்.

34.
இந்த்ரியஸ் யேந்த்ரியஸ் யார்தே ராக த்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந வசம்ஆகச்சேத் தௌ ஹ்யஸ்ய பரிபந்தி நௌ
இந்த்ரியங்கள் மேலுள்ள ஆசை, நிராசை எல்லாமே அந்த இந்த்ரியங்களிலேயே உறைகின்றன. எவருமே இதன் கட்டுப்பாட்டில் வர வேண்டாம். ஏனென்றால் இவை தான் அவனின் எதிரிகள்.

35.
ஸ்ரேயாந் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்  
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:
கீர்த்தி என்பது இல்லாமல் போனாலும், தனது சொந்த கடமையே, நன்றாக நிறைவேற்றப்பட்ட மற்றவனின் கடமையை விட மேலானது. தன் சொந்த கடமையில் கிடைக்கும் மரணம் மேலானது. மற்றவனின் கடமை அதன் உள்ளே அச்சத்தைக் கொண்டுள்ளது.

36.
அர்ஜுந உவாச:
அத கேந பிரயுக்தோ(அ)யம் பாபம் சரதி பூருஷ:
அநிச்சந்நபி வார்ஷ்ணேய ப(फ)லாதிவ நியோஜித:
அர்ஜுனன் சொன்னது:
வர்ஷ்நேயா! ஒரு வேளை தனது விருப்பத்திற்கு மாறாக, வேறு வழி இல்லாமல், கட்டாயப்படுத்தப் பட்டாலும், எதனால் உந்தப்பட்டு மனிதன் பாபம் செய்கிறான்? 

37.
ஸ்ரீ பகவான் உவாச:
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ:
மஹாசநோ மஹா பாப்மா வித்த்யேநம் இஹ வைரிணம்
பகவான் சொன்னது:
பாவமே நிறைந்த, அனைத்தையும் விழுங்கும் - ரஜோ குணத்தில் பிறந்த காமம் (ஆசை), குரோதம் இவை தான் இந்த உலகில் உள்ள எதிரிகள்.

38.
தூமே நாவ்ரியதே வஹ்நிர் யதா தர்ஷோ மலேந ச
யதோல்பேநாவ்ருதோ க(ग)ர்பஸ் ததா தேநேதம் ஆவ்ருதம் 
எப்படி அக்னி புகையாலும், ஒரு கண்ணாடி தூசியினாலும், கர்ப்பத்தில் உள்ள சிசு அதில் உள்ள திரவத்தாலும் சூழப்பட்டுள்ளதோ, அதைப் போல இங்குள்ள எல்லாமே அதால் சூழப்பட்டுள்ளது.

39.
ஆவ்ருதம் ஜ்ஞாநமே தேந ஜ்ஞாநிநோ நித்ய வைரிணா 
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாந லேந ச
அர்ஜுனா! அறிவு அதன் நித்ய எதிரியான - ஆசை என்ற வடிவில் உள்ள, அக்னியைப் போல திருப்தி படுத்த முடியாத ஒன்றால் சூழப் பட்டுள்ளது.  

40.
இந்த்ரியாணி மநோ புத்திர் அஸ்யாதிஷ்டாநம் உச்யதே 
ஏதைர் விமோஹயத்யேஷ ஜ்ஞாநம் ஆவ்ருத்ய தேஹிநம் 
புலன்கள், மனம், அறிவு அதன் இருப்பிடம். அவனது அறிவை மழுங்கடித்து,  உடல் பலம் கொண்டவர்களையும் மயக்கி விடுகிறது.

41.
தஸ்மாத்த்வம் இந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாந விஜ்ஞாந நாசநம்
பரத குலத்தில் சிறந்தவனே! ஆகையால் புலன்களை முதலில் அடக்கி நீ இந்த பாவத்தை கொண்ட ஆசையைக் கொல்வாயாக. இது(ஆசை) ஞானத்தையும், விஜ்ஞானத்தையும் (உணர்ந்து தெரிந்து கொள்வது) அழிக்கக் கூடியது. 

42.
இந்த்ரியாணி பராண் யாஹூர் இந்த்ரியேப்ய: ப்ரம்ம ந:
மநஸஸ்து பரா புத்திர் யோ புத்தே: பரதஸ்து ஸ: 
இந்த்ரியங்கங்கள் உடலை விட உயர்ந்தது.
மனம் இந்திரியங்கங்களை விட உயர்ந்தது.
அறிவு மனதை விட உயர்ந்தது.
இந்த அறிவை விட உயர்ந்தவன் எவனோ அவனே பரப்ரஹ்மம். 

43.
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநம் ஆத்மநா 
ஜஹி ச(श)த்ரும் மஹாபாஹோ காம ரூபம் துராஸதம்
அர்ஜுனா! பெருந்தோள் கொண்டவனே! அறிவை விட உயர்ந்த அந்த பரப்ரஹ்மத்தை அறிந்து கொண்டு, புலன்களை அந்த ப்ரஹ்மத்தினால் அடக்கி, வெற்றி கொள்வதற்கு கடினமான, ஆசை என்ற வடிவில் உள்ள இந்த எதிரியைக் கொல்வாயக.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே கர்ம யோகோ நாம த்ருதீயோத்யாய:  
இது ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத், பிரம்மத்தைப் (ஆத்மாவைப்) பற்றிய கல்வி, யோக சாஸ்திரம் (வாழ்க்கையில் செல்ல வேண்டிய பாதையை குறிக்கும் நூல்), ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் இடையே நடந்த உரையாடல், கர்ம யோகம் என்ற மூன்றாம் அத்தியாயம்.

விசாரம்
கிருஷ்ணரின் யது குலத்திற்கு வ்ருஷ்ணீ குலம் என்ற பெயரும் உண்டு. அதன் மூலமாக அவருக்கு வர்ஷ்ணீயா என்ற பெயர் வந்தது.

எல்லா சாஸ்திரமும் காமம், குரோதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தான் சொல்கின்றன. உதாரணமாக சொன்னால் தான் புரியும் என்பதால் தான் காப்பியங்கள் மூலம் அதை நமக்கு உணர்த்துகின்றன. சனாதன தர்மத்தில் உள்ள ரெண்டு காப்பியங்கள் - ராமாயணம், மகாபாரதம். இரண்டிலுமே கெட்டவர்கள் அழிவிற்கு மூலக் காரணம் இந்த ஆசை மற்றும் குரோதம் தான். ராவணன் சீதை மேல் வைத்த ஆசை அவன் அழிவிற்கு காரணம், கூனி ஸ்ரீ ராமர் மேல் கொண்ட த்வேஷம், கைகேயின் உள்ளே ராஜமாதா ஆகும் ஆசையைத் தூண்டி விட்டு அவளைக் கெடுத்தது. சூர்பனகை ராம லக்ஷ்மணர் மேலே கொண்ட ஆசை அவள் மூக்கைப் பங்கப் படுத்தியது. துர்யோதனன் சிறு வயதிலிருந்தே பாண்டவர் மேல் கொண்ட த்வேஷம், அவர்களின் ராஜ்ஜியம் மேலே கொண்ட ஆசை அவன் அழிவிற்கு காரணம் ஆனது. இருந்தும் நம் மனதில் இந்த ஆசை போகிறதா? இல்லையே. வில்லி பாரதம் என்று ஒரு நூல் - வில்லிபுத்தூர் ஆழ்வார் எழுதினது. ஆசையைப் பற்றி சொல்லும் போது - மனது ஒரு பொருளுக்கு ஆசைப் படுகிறது. அதை எளிதாகவோ, இல்லை கஷ்டப்பட்டோ அடைந்த உடனே இவ்வளவு தானா என்று நினைத்து அதற்கு அடுத்த உயர்ந்த பொருளை ஆசைப் பட ஆரம்பித்து விடுகிறது. இந்த ஆசை நிராசை ஆகும் போது அது குரோதத்தை உண்டு பண்ணுகிறது. ஒரு எதிரி நம்மை அதை விட கெடுதல் செய்யும் அடுத்த எதிரியிடம் தள்ளி விடுவதைப் போல. Greed begets anger; anger begets doom. ஏதோ க்ஷண நேரத்தில் தோன்றிய குரோதம் எத்தனையோ மக்களின் வாழ்கையை சீரழிப்பதை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். அப்படியும் புத்தி வராமல் யானை தன் தலையில் மண்ணை அள்ளி போடுவது போல கெடுத்துக் கொள்கிறோம். அந்த ஆசையும், குரோதமும் நம் அறிவை மயக்கி, நம்மை அழித்து விடுகிறது.
சரி இதில் இருந்து எப்படி தப்புவது. அதையும் கிருஷ்ணர் உபதேசிக்கிறார்.
இந்த ஆசை புலன்களில் இருக்கிறது, அதனால் தான் புலன் அடக்கம் முக்கியம். அந்தப் புலனை அடக்க மனதை அடக்க வேண்டும். முன்பே பார்த்தோம் - மனம் ஒரு குரங்கு. கயிறு உதாரணத்தில் சொன்ன மாதிரி மனதை அடக்க வேண்டும். அப்படி மனதை அடக்க, அதை அடக்க வேண்டுமே என்று அறிவு உணர வேண்டும். இந்த அறிவு எப்படி/எப்பொழுது வரும் என்றால், சதா ப்ரஹ்மத்தைப் பற்றியே நினைத்து கொண்டிருக்கும் சாதனத்தால் (practise) தான் வரும். ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனை இப்படி செய்யச் சொல்கிறார்.

Thursday, October 27, 2011

Chapter 3 - Karma Yoga [21-30]

21.
யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அநுவர்த்ததே
சான்றோன் எதைச் செய்கிறானோ, அதையே மற்றவர்களும் செய்வார்கள். அவன் எதை தகுதியாக நிர்ணயிக்கின்றானோ, அதையே உலகமும் பின்பற்றும்.  

22.
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந 
நா நவாப்தம் அவாப்தவ்யம் வர்த்த ஏவ ச கர்மணி
அர்ஜுனா! இந்த மூவுலகில் நான் செய்வதற்கு என்று எதுவுமே இல்லை, அடையாமல் உள்ளது என்று எதையும் அடைய வேண்டியதில்லை. இருந்தும் நான் என்னைக் கடமையில் ஈடுபடுத்திக் கொள்கிறேன்.

23.
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்ய தந்த்ரித: 
மம வர்த்மாநு வர்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வச:
அர்ஜுனா! நான் தளராமல் என்னைக் கடமையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாமா? அப்பொழுது தானே மக்கள் எல்லா வழியிலும் என் பாதையைப் பின்பற்றுவார்கள்.

24.
உத்ஸீதேயுர் இமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா: பிரஜா:   
நான் கடமையைச் செய்யவில்லை என்றால், இந்த உலகங்கள் அழிந்து விடும். வர்ணக் குழப்பம் ஏற்படும், உயிர்கள் அழிந்து விடும். 

25.
ஸக்தா: கர்மண்ய வித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத் வித்வாம் ஸ்ததா(அ)ஸக்தச் சிகீர்ஷூர் லோக சங்க்ரஹம் 
பாரதா! அறிவீனர்கள் கடமையின் மீது பற்று கொண்டு செயல்படுகிறார்கள். அதனால் சான்றோர் லோக க்ஷேமத்தை மனதில் கொண்டு பற்றில்லாமல் செயல் பட வேண்டும்.

26.
ந புத்தி பேதம் ஜநயேத் அஜ்ஞாநாம் கர்ம ஸங்கிநாம்
ஜோஷயேத் ஸர்வ கர்மாணி வித்வாந் யுக்த: ஸமாசரந்
எந்த சான்றோனும், கடமையில் பற்று கொண்டு அஞ்ஞானத்தில் உள்ளவர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்கட்டும். அவன் அவர்களை எல்லாச் செயல்களிலும் ஈடுபடுத்தி, அவனே அவற்றை பக்தியோடு நிறைவேற்ற வேண்டும்.

27.
ப்ரக்ருதே: க்ரியமாணாநி கு(ग)ணை: கர்மாணி ஸர்வச:
அஹங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மந்யதே
பிரக்ருதி என்ற ஒன்றின் குணங்களைக் கொண்டே எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன, எவன் ஒருவன் மனது 'தான்' என்ற ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதோ, அவன் 'தான்' தான் செய்தோம் என்று எண்ணிக் கொள்கிறான். 

28.
தத்த்வவித்து மஹா பாஹோ குண கர்ம விபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே
பெருந் தோள்களைக் கொண்ட அர்ஜுனா! எவன் ஒருவன் குணங்களின் விபாகம் (பிரிவுகள்) மற்றும் அதன் செயல்களைத் தெரிந்து கொண்டுள்ளானோ, அந்த குணங்கள் என்ற குணமே, குணங்கள் என்ற இந்திரியங்களிடையே உழலுகின்றன என்ற உண்மையை அறிந்துள்ளானோ - அவன் எதிலும் பற்று வைப்பதில்லை.  

29.
பிரக்ருதேர் குண ஸம்மூடா: சஜ்ஜந்தே குண கர்மஸு 
தாந் அக்ருத்ஸ்ந விதோ மந்தாந் க்ருத்ஸ்ந விந்ந விசாலயேத்
பிரக்ருதி (இயற்கை) என்ற ஒன்றின் குணங்களால் மூழ்கடிக்கப் பட்டவர்கள், குணங்களின் செயல்கள் மீது பற்று கொண்டுள்ளார்கள். பூர்ண ஞானம் கொண்ட ஒருவன், முழுமையான ஞானம் பெறாத ஒரு மூடனை தடுமாற வைக்கக் கூடாது. 

30.
மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்ம சேதஸா
நிராசீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:
எல்லாக் கடமைகளையும் என்னிடம் விட்டு விட்டு, மனதை பிரம்மத்தில் செலுத்தி, நிராசை, தான் என்ற எண்ணம், மனக் குழப்பம் இல்லாமல் நீ சண்டை இடு. 

விசாரம்
மனுஷ குணம் மற்றவர்களை follow செய்து, அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே செய்ய ஆசைப் படுவது. அது நல்லதா, கெட்டதா என்று பகுத்தறியும் புத்தி எல்லாருக்கும் இருப்பதில்லை. எனவே சான்றோர்களுக்கு ஒரு முக்கிய கடமை உள்ளது - lead by example. இங்கிருந்து தான் கிருஷ்ணர் தன்னை ஒரு பரமாத்மாவாக நிலை நிறுத்த ஆரம்பிக்கின்றார். அவர் செய்வதற்கு / அடைவதற்கு என்று ஒன்று இவ்வுலகில் எதுவுமே இல்லை - ஏனென்றால் அனைத்தின் கர்த்தாவும் அவர் தானே. அதற்காக அவர் சும்மா இருந்தால், மற்றவர்களும் அப்படியே இருந்து விடுவார்களே. உலகில் செயல்கள் சரியாக
நடக்கவில்லை என்றால் உலகமே அழிந்து விடுமே. அதனால் அவரும் இங்கே ஒரு leader ஆக இருந்து தான் கடமையைச் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறார். 

எல்லோருமே கடமையின் பலன்கள் மீது ஆசை கொண்டே செயல்கள் புரிந்தால் லோக க்ஷேமம் எப்படி கிடைக்கும். அதனால் சான்றோரின் அடுத்த கடமை நிஷ்காம்யமாக இந்த செயல்களைச் செய்வது. எல்லோருக்கும் எல்லா ஞானமும் இருப்பதில்லை. ஞானம் கொண்ட ஒருவன், அஞ்ஞானத்தில் உள்ளவர்களை மேலும் குழப்பாமல், அவர்களுக்காகவும் பக்தியுடன் செயல் புரிய வேண்டும்.

பிரக்ருதி என்ற ஒன்றின் குணங்களாலேயே இந்த உலகின் இயக்கமே அமைந்துள்ளது. இந்த குணங்கள் மூன்று வகைப்பட்டது - சத்வம், தமஸ் மற்றும் ரஜஸ். எவன் ஒருவன் இந்த பிரக்ருதியின் குணங்கள் என்ற ஒன்றாலேயே இந்த உலகின் குணங்கள் (செயல்கள்) நடைபெறுகின்றன என்ற உண்மையை அறிந்துள்ளனோ அவனே நிஷ்காம்யமாகச் செய்யும் பக்குவத்தை அடைகிறான். ஆனால் இதை உணராத ஒருவன் தன்னால் தான் எல்லா செயல்களும் நடைபெறுகின்றன என்ற தற்பெருமை கொள்கிறான். 

கிருஷ்ணர் தன்னை பரமாத்மாவாக காட்டி, எல்லாச் செயல்களையும் தன்னிடம் சமர்ப்பித்து, ஆசை எதுவும் இல்லாமல், தான் என்ற எண்ணம் இல்லாமல் அர்ஜுனனை ஆத்மா என்ற ஒன்றில் ஒன்றி இங்கே போரிடச் சொல்கிறார். அர்ஜுனன் சாதாரண மனிதன் தானே, அவனுக்கு பல கேள்விகள் எழுகின்றன. அவனது எல்லா சந்தேகங்களையும் போக்கி இதே அறிவுரையை 18 ம் அத்யாயத்திலும் கூறுகிறார். அந்த கேள்விகள் என்ன என்று அடுத்துப் பார்ப்போம். 

ஸ்மார்த்த தர்மத்தில் ஒரு செயலை ஆரம்பிக்க பரமேஸ்வரனின் அநுக்ரஹம் தேவை. அதனால் ஆரம்பத்தில் 'மமோபாக்த சமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்' என்று அந்த பரமேஸ்வரனின் ப்ரீதியை/ அனுக்ரஹத்தைக் கேட்கிறோம். கடைசியாக சொல்வது 'காயேன வாசா' ஸ்லோகத்தை. அதன் ரெண்டாவது வரியில் வருவது 'நாராயணாயேதி சமர்ப்பயாமி'. அந்தக் காரியம் நல்லபடியாக முடிந்ததற்கு நாராயணனுக்கு நன்றி சொல்லி 'சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து'  என்று சொல்லி அந்த செயலின் பலனை கிருஷ்ணருக்கே (அல்லது இஷ்ட தெய்வத்திற்கு) அர்ப்பணம் செயகிறோம். இதன் பரிபூர்ண அர்த்தம் நாம் அந்த பூஜையின் பலனின் மீது ஆசை வைக்கவில்லை, நிஷ்காம்யமாக செய்கிறோம் என்பதற்காகத் தான். இதை மனதில் கொள்ள ஆரம்பித்தால் நாளடைவில் எல்லாச் செயலுமே (ஈஸ்வர உபாசனையோ/மற்றதோ) நிஷ்காம்யமாகச் செய்யும் பக்குவம் வரும். 
   

Monday, October 17, 2011

Chapter 3 - Karma Yoga [11-20]

11.
தேவாந் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத 
இதன் மூலம் நீ தேவர்களுக்கு படைக்க, அவர்களும் உன்னை ரக்ஷிக்கட்டும். இப்படி பரஸ்பரம் ஒருவரை ஒருவர் திருப்தி செய்து நீ உயர்ந்த நிலையை அடைவாய். (இங்கே யஜ்ஞத்தில் செய்யப்படும் ஆஹுதியை குறிக்கிறது).

12.
இஷ்டாந் போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா:
தைர் தத்தாந் அப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:
யஜ்ஞத்தினால் திருப்தி செய்யப்பட்ட தேவர்களும், உனக்கு வேண்டிய போகங்களை அளிப்பார்கள். ஆகையினால் எவன் ஒருவன் யஜ்ஞத்தில் எதையும் சமர்ப்பிக்காமல், இறைவன் அளித்த போகங்களை மட்டும் அனுபவிக்கின்றானோ, அவன் திருடன் ஆகிறான்.

13.
யஜ்ஞ சிச்டாசிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்ம காரணாத்
யஜ்ஞத்தில் படைக்கப்பட்டதில் மீதி உள்ளதை உண்ணும் புண்ணிய ஆத்மாக்கள் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் தான் மட்டுமே உண்பதற்காக உணவைச் சமைக்கும் பாபிகள், பாவத்தையே உண்கிறார்கள். 

14.
அந்தாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:    
யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:
உணவில் இருந்து உயிர்கள் வருகிறது; உணவு மழையினால் படைக்கப்படுகிறது; மழை யஜ்ஞத்தில் இருந்து உருவாகிறது; யஜ்ஞம் கர்மத்தினால் உருவாகிறது.

15.
கர்ம ப்ரஹ்மோத் பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம்
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் 
கர்மா ப்ரஹ்மத்தில் இருந்து வருகிறது என்பதை அறிந்து கொள். ப்ரஹ்மம் அழிக்க முடியாத ஒன்றில் இருந்து வருகிறது. அதனால் அனைத்திலும் வியாபித்திருக்கும் ப்ரஹ்மம் எப்பொழுதும் யஜ்ஞத்தில் உறைகிறது.

16.
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்த்தயதீஹ ய:
அகாயுர் இந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி
அர்ஜுனா! இப்படிச் சுழலும் சக்கரத்தைப் புரிந்து கொள்ளாமல், எவன் ஒருவன் பாவப்பட்ட வாழ்கை வாழ்ந்து, இந்த்ரியங்களிலேயே மோஹித்து இருப்பானோ அவன் வீணான வாழ்கை வாழ்கிறான்.

17.
யஸ்த்வாத்மரதிர் ஏவ ஸ்யாத் ஆத்ம த்ருப்தச்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ் தஸ்ய கார்யம் ந வித்யதே
ஆனால் எவன் ஒருவன் ஆத்மாவில் மட்டுமே சந்தோஷித்து, அதிலேயே திருப்திப் பட்டு, அதில் மட்டுமே மனச் சாந்தி கொள்கிறானோ - அவனுக்கு வேறு எந்த காரியமும் இல்லை.

18.
நைவ தஸ்ய க்ருதே நார்தோ நாக்ருதே நேஹ கச்சந
ந சாஸ்ய ஸர்வ பூதேஷு கச்சித் அர்த வ்யபாச்ரய:
அவனுக்கு எது நடை பெறுகிறது, எது நடை பெறவில்லை என்பதில் எந்த ஒரு பற்றும் இல்லை. அதைப் போல அவன் எந்த ஒரு பொருளின் மீதும் சார்ந்து இல்லை.  

19.
தஸ்மாத் அஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர 
அஸக்தோ ஹ்யாசரந் கர்ம பரமாப்நோதி பூருஷ:
அதனால் எந்த ஒரு பற்றும் இல்லாமல் நீ செய்ய வேண்டிய உனது கடமைகளைச் செய்ய வேண்டும். கடமைகளைப் பற்று இல்லாமல் செய்வதன் மூலம் நீ பரமாத்மாவை அடைய முடியும்.

20.
கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜநகாதய:  
லோக ஸங்க்ரஹம் ஏவாபி ஸம்பச்யந் கர்த்தும் அர்ஹஸி
ஜனகர் மற்றும் பலர் தங்களின் கடமைகளின் மூலம் மட்டுமே ஸித்தி அடைந்தார்கள். மக்களைக் காக்கும் அவசியத்திற்காவது நீ கடமைகளைச் செய்ய வேண்டும்.

விசாரம்
யஜ்ஞத்தில் நாம் ஆஹுதி படைத்து அதன் மூலம் பெரிய பலன்களை அடைய ஆசைப்படுகிறோம். இது ஒரு மாதிரியான symbiotic relationship -  நான் உனக்கு இதைச் செய்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு இதைச் செய் என்ற ஒரு expectation நம் மனதில் கொண்டு இதைச் செய்கிறோம். இதுவாவது பரவாயில்லை. இன்னும் சிலர் எதையும் இறைவனுக்குப் படைக்காமல் எல்லா போகங்களையும் அனுபவிக்கின்றார்கள். அவர்கள் திருடர்களே அன்றி வேறு எவராக முடியும். இந்த காலத்தில் யஜ்ஞம் என்று அக்னியைக் கொண்டு தினமும் பண்ண முடிவதில்லை தான். அக்னிஹோத்ரமாக செய்தால் தான் யஜ்ஞம் என்றில்லை. முடிந்த அளவு உணவு சமைத்தப் பின்னர் பகவானுக்கு நிவேதனம் செய்து விட்டு பின்னர் மீதத்தைச் சாப்பிடலாம். தைத்திரிய உபநிஷத்தில் வரும் 'அதிதி தேவோ பவ' என்பதை ஏற்று அதிதி சம்ஸ்காரம் செய்யலாம். அதிதி சம்ஸ்காரம் என்பது க்ரிஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவருடைய முக்கியமான கடமையாகும்.

இப்படி கடமையை ஒழுங்காகச் செய்வதன் மூலம், யஜ்ஞம் ஒழுங்காக நடந்து, அதன் மூலம் மழை ஒழுங்காகப் பெய்து, தானிய விளைச்சல் நன்றாக இருந்து, அதன் மூலம் உயிர்களின் ஸ்ருஷ்டி நடக்கிறது. அழிவில்லாத ஒன்றில் இருந்து வரும் ப்ரஹ்மம் இப்படி செய்யப் படும் யஜ்ஞத்தில் இருக்கிறது. இந்த நியதியைப் புரிந்து கொள்ளாமல் வெறும் இந்திரிய சுகங்களில் மட்டுமே மூழ்கி இருக்கும் ஒருவனால் இந்த உலகிற்கு என்ன பயன்.

கடமை என்ற ஒன்று செய்யாமல் எவராலுமே இருக்க முடியாது என்று முன்பு பார்த்தோம். இந்த உலகில் ஏதாவது கர்மா செய்யத் தான் வேண்டி உள்ளது.  அதற்காக எந்த ஒரு ethics உம் இல்லாமல் செய்வது கடமை ஆகாது. நாம் செய்வது தர்ம வழியிலான கடமையாக இருக்க வேண்டும். காமம், அர்த்தம் இந்த ரெண்டிற்காகவும் நாம் காரியங்களைச் செய்கிறோம். காமம் என்பது ஆசையைக் குறிக்கிறது, அர்த்தம் என்பது இங்கே security என்ற பொருளில் வருகிறது. நம்முடைய secured life க்கு தேவையானது என்று பொருள் கொள்ளலாம். மற்ற உயிர்களிடம் இல்லாத ஒன்று மனுஷ ஜென்மத்திற்கு உண்டு - common sense. இந்த அறிவைக் கொண்டு நாம் நமது செயல்களைப் பகுத்தறிய வேண்டும். மற்றவர்கள் நமக்கு எதைச் செய்தால் நாம் விரும்ப மாட்டோமோ, அந்த ஒன்றை நாம் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதே தர்மம். இந்த தர்ம வழியில் நமது செயல்களை செய்தால் அதுவே உத்தமம். 

இப்படி கர்மத்தை நிஷ்காம்யமாகச் செய்து மனதை ப்ரஹ்மத்தில் மட்டுமே லயிக்க வைத்திருந்தால் மட்டுமே அவன் அந்த ப்ரஹ்மத்தில் ஒன்றாகக் கலக்க முடியும். கிருஷ்ணர் இப்படி நிஷ்காம்யமாக இருந்தவர்களில் ஜனகரை உதாரணம் காட்டுகிறார். மிதிலாபுரி தீ பிடித்து எரிந்த போது ஜனகர் மனம் கலங்காது - எதுவுமே தன்னுடையது இல்லை என்ற உணர்வோடு வருந்தாமல் இருந்தாராம். அதற்காக மக்களை காப்பாற்றாமல் விடவில்லை. கிருஷ்ணரும் இங்கே அர்ஜுனனை மக்களை காக்க வேண்டியாவது போரில் ஈடுபடச் சொல்கிறார்.

Monday, October 10, 2011

Chapter 3 - Karma Yoga [1-10]


1.
அர்ஜுந உவாச:
ஜ்யாயஸீ சேத் கர்மணஸ்தே மதா புத்திர் ஜனார்தந
தத் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேசவ
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! நீ கர்மத்தை விட ஞானமே உயர்ந்தது என்று நினைத்தால் பின் ஏன் கேசவா! நீ என்னை இந்த கொடிய செயலில் ஈடுபடச் சொல்கிறாய்?

2.
வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிச்சித்ய யேந ஸ்ரேயோ(அ)ஹமாப்நுயாம்
குழப்புவது போல இருக்கும் உனது இந்த வார்த்தைகள் எனது சிந்தையை மேலும் குழப்பி விட்டது. எதன் மூலம் நான் உறுதியாக பேரானந்தத்தை அடைய முடியுமோ அந்த வழியை நீ கூறு

3.
ஸ்ரீ பகவான் உவாச:
லோகே(அ)ஸ்மின் த்விவிதா நிஷ்டா புரா ப்ரேரக்தா மயாநக 
ஜ்ஞாந யோகேந ஸாங்யாநாம் கர்ம யோகேந யோகிநாம் 
ஸ்ரீ பகவான் சொன்னது:
பாவம் இல்லாதவனே! முன்பே நான் கூறியதைப் போல இந்த உலகில் இரு வழியிலான பாதைகள் உள்ளன - ஸாங்க்யம் அறிந்த ஞான வழி, கர்மம் என்ற யோகிகளின் வழி.

4.
ந கர்மணாம் அநாரம்பாந் நைஷ்கர்ம்யம் புருஷோ(அ)ஷ்நுதே 
ந ச ஸந்ந்யஸா நாதேவ ஸித்திம் ஸமதி கச்சதி
எந்தச் செயலும் செய்யாமல் இருப்பதால் ஒருவன் செயலற்ற நிலையை அடைவதில்லை. அது போலவே வெறுமனே பற்றுகளைத் துறப்பதால் ஒருவன் ஸமாதி நிலையை அடைவதில்லை.

5.
ந ஹி கச்சித் க்ஷணம் அபி ஜாது திஷ்டத்ய கர்மக்ருத்
கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:
எவருமே எந்த ஒரு நொடியும் செயல்களைச் செய்யாமல் இருந்து விட முடியாது. ஏன் என்றால் இந்த இயற்கையின் குணத்தினால் எல்லோருமே வேறு வழி இல்லாமல் செயல் பட வேண்டி உள்ளது.

6.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே 
எவன் ஒருவன் வெளியே செயல் உறுப்புகளை எல்லாம் அடக்கி, மனதின் உள்ளே ஆசைகளை உருவாக்கும் பொருட்களை நினைத்தே அமர்ந்து உள்ளானோ - அந்த குழப்பமான புரிதலைக் கொண்ட அவன் ஒரு மூடன், பொய் ஒழுக்கம் கொண்டவன்.

7.
யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே(அ)ர்ஜுந 
கர்மேந்த்ரியை: கர்ம யோகம் அஸக்த: ஸ விசிஷ்யதே 
எவன் ஒருவன் இந்த்ரியங்களை மனதில் அடக்கி, கர்ம யோகத்தில் தனது செயல் உறுப்புகளால் பற்று இல்லாமல் தன்னை ஈடுபடுத்திக் கொள்வானோ - அர்ஜுனா! அவனே சிறந்தவன் ஆவான்.

8.
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத் அகர்மண:
உனக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை நீ செய். செயல் செயலின்மையை விடச் சிறந்தது. உனது செயலின்மையால் உனது உடலைக் கூட உன்னால் பேண முடியாது.

9.
யஜ்ஞார்தாத் கர்மணோ(அ)ந்யத்ர லோகோ(அ)யம் கர்ம பந்தந:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்த ஸங்க: ஸமாசர
இந்த உலகம் யஜ்னத்தில் சமர்பிக்கப் படும் சமர்பணங்களைத் தவிர பிற செயல்களாலும் கட்டுப்பட்டுள்ளது. அதனால் குந்தியின் பிள்ளையே! செயலை யஜ்னத்தில் செய்யப்படும் சமர்ப்பணம் ஆக மட்டும் கருதி, பற்றில்லாமல் செய். 

10.
ஸஹயஜ்ஞா: பிரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச பிரஜாபதி:
அநேந பிரஸவிஷ்யத்வம் ஏஷ வோ(அ)ஸ்த்விஷ்டகாம துக்
பிரஜாபதியான இந்த உலகைப் படைத்தவர், ஆரம்பத்தில் மானுட ஜென்மத்தை யக்ஞ சமர்ப்பணம் என்ற ஒன்றோடு படைக்கும் போது 'இதன் மூலம் நீங்கள் பல்கிப் பெருகுவீர்கள், இது வேண்டியதை அளிக்கும் காமதேனுவாக இருக்கும்' என்று கூறிப் படைத்தார்.

விசாரம்
மூன்றாவது அத்தியாயத்தின் பெயர் கர்ம யோகம். இதன் ஸ்ரேஷ்டம் என்னவென்றால் இதைப் பாராயணம் செய்பவர்கள் அவர்களின் சுய பாவங்களைத் தொலைப்பதொடு, அவர்களின் பித்ருக்கள் செய்த பாவங்களையும் தொலைப்பராம். மகாளய பக்ஷத்தில் இந்தப் அத்தியாயத்தைப் பாராயணம் செய்தல் இன்னும் பலன்.

வாழ்க்கையில் ரெண்டு விதமான பாதைகள் உண்டு - ப்ரவ்ருத்தி என்ற கர்ம மார்க்கம், நிவ்ருத்தி என்ற ஞான மார்க்கம். ஞான மார்க்கம் கர்ம மார்க்கத்தை விட உயர்ந்தது. அர்ஜுனன் மாதிரியே நமக்கும் இந்த சந்தேகம் வரும். அப்படி ஒரு வேளை ஞான மார்க்கம் தான் பெரிது என்றால் எதற்காக கர்ம மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டும்? ஞான மார்க்கம் மட்டும் தான் என்றால் கிருஷ்ணருக்கும் பதினெட்டு அத்தியாயம் உபதேசிக்க வேண்டி இருந்துருக்காது :) நேரே அதை மட்டும் சொல்லி இருக்கலாம் இல்லையா? எல்லாருக்குமே அர்ஜுனன் இந்த நிலையில் இருப்பது மாதிரி நேரடியாக ஞான மார்க்கத்தை உபதேசம் பெற்றால் புரிந்து கொள்ளும் சக்தி கிடையாது. எதையுமே படிப் படியாகத் தானே கற்றுக் கொள்ள முடியும். 

நாம் வாய் வார்த்தையாக சும்மா இருக்கிறோம் என்று சொன்னாலும், உண்மையில் நாம் எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம், இல்லை என்றால் இந்த சரீரத்தை வளர்க்க முடியாது. வெறுமனே சாப்பிட்டு, தூங்கினாலும் அதுவும் ஒரு செயல் தானே. எதுவுமே வேண்டாம் என்று எல்லோராலும் சட் என்று சன்யாசம் வாங்கி விட முடியாது. க்ருஹஸ்தாஸ்ரமம் என்ற ஒன்றின் பின்னே வானப்ரஸ்தம் என்ற ஒன்று, அதன் பின்னர் தான் சந்யாசம். இந்த வானப்ரஸ்தம் ஒரு transition period மாதிரி - ஆசைகளை குறைத்துக் கொண்டு, காட்டில் இருக்கப் பழகிக் கொண்டு அப்புறம் சன்யாசம் வாங்குவது. இல்லை என்றால் இவனை மாதிரி தான் ஆகும்:   
ஒருத்தன் சம்சாரி - மனைவி குழந்தைகள் எல்லாம் உண்டு. ஏதோ ஒரு கோவமோ, வெறுப்போ, சம்சாரம் வேண்டாம், சன்யாசம் வாங்குகிறேன் என்று குருவைத் தேடி போகிறான். அவரைக் கண்டு பிடித்து தீக்ஷை வாங்கும் சமயம். தீக்ஷை நடு குளமோ, ஆற்றிலோ கொடுப்பார்கள். அங்கே நீர் தெளிவாக இருக்கும். கரைப் பகுதியில் கொஞ்சம் சேறாக இருக்கும் இல்லையா. இவனுக்கு ஒரு குழப்பம் - அடடா! நம்ம குழந்தைகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கலியே, பேரன், பேத்திகளோட விளையாடலியே அப்படின்னு ஒரு ஆசை அந்த சமயத்தில் வருகிறது. சரி திரும்ப வீட்டிற்குப் போகலாம் என்றால் மனைவியோடு போட்ட சண்டை நினைவு வந்து ஏன் போகணும் என்று தோன்றுகிறது. இந்த dilemma வோட ஆத்துல ஒரு கால், சேற்றுல ஒரு கால்னு இருக்கக் கூடாது. மனசு முழுக்க ஆசையை வெச்சுண்டு, நான் மூச்சை அடக்கறேன், தியானம் பண்றேன்னு சொல்றதுல பலன் இல்லை. அப்படி பண்றவன் ஒரு hypochrite. 

அர்ஜுனன் மாதிரி நம்ம எல்லாருக்கும் உடனடியாக பண்றதுக்கு சில/பல கடமைகள் இருக்கு. அந்த கடமைகள் எல்லாவற்றையும் செய்யற கர்ம யோகம் தான் முதல் படி. எல்லாச் செயல்களையும் ஒரு யாகம் மாதிரி செய்யறது தான் கர்ம யோகம். யாகம் பண்ற போது நாம் அதில் சமர்ப்பிக்கின்ற ஆஹுதி மேல நாம் ஆசைப்படுவதில்லை தானே?  ஏன் - அதை விட ஒரு பெரிய பலனை அந்த யாகத்தில் எதிர்பார்கிறோம். அதனால தான் வேதங்களும் கர்ம காண்டத்தில் ஆரம்பிக்கின்றது. அதை ஒழுங்காச் செய்தால், அதுக்கு அடுத்தப் படி கர்ம சந்நியாச யோகம் - அந்த கடமைகளைப் பற்று இல்லாமல் நிஷ்காம்யமாகச் செய்யறது. அதுலேர்ந்து பக்தி யோகம். பக்தி என்ற ஒன்றை cultivate பண்ண சத்வ குணத்தை வளர்த்துக்கனும், அந்த ஈஸ்வரனோட மேன்மை, பெருமை என்னவென்று தெரிந்து கொள்ளனும், இந்த உடல்/மனம் பற்றின உண்மைகளைத் தெரிந்து கொண்டு ஆத்மஞானம் பெற்றால் அப்பொழுது நாம் நம்முடைய எல்லா தர்மங்களையும், செயல்களையும் விட்டு விட்டு அந்த ஈஸ்வரனோட பாதத்தில் சரணாகதி அடைந்தால் நமக்கு மோக்ஷம் என்ற பதவி கிடைக்கும். இது தான் அடுத்து வரப் போற அத்தியாயங்களின் சாராம்சம்.

Tuesday, October 4, 2011

Chapter 2 - Saankhya Yoga [62-72]

62.
த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ் தேஷு பஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே 
இந்த விஷயங்களைக் குறித்து ஒருவன் நினைக்கும் போது, அவற்றின் மீதான பற்று அவனுக்கு ஏற்படுகிறது. அந்தப் பற்றில் இருந்து ஆசை பிறக்கிறது. ஆசையினால் அவனுக்கு கோபம் வருகிறது.

63.
க்ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதி பிரம்சாத் புத்தி நாசோ புத்தி நாசாத் பிரணஷ்யதி
கோபத்தினால் மனதில் ஒரு மயக்கம் உண்டாகிறது. அந்த மயக்கத்தினால் 
நினைவு தப்புகிறது. அப்படி நினைவு தவறுவதால் அவனிடம் புத்தி நாசம் ஏற்பட்டு நல்லது, கெட்டதை பகுத்தறியும் தன்மை விலகிப் போகிறது. பகுத்தறியும் தன்மை விலகும் போது அவன் அழிகிறான்.

64.
ராக த்வேஷ விமுக்தைஸ்து விஷயாந் இந்த்ரியைச் சரந்
ஆத்ம வச்யைர் விதேயாத்மா ப்ரஸாதம் அதி கச்சதி
ஆனால் தன்னை அடக்கிய ஒருவன், இந்த விஷயங்கள் மத்தியில் இருக்கும் போதும் தனது புலன்களை அடக்கி, பற்றோ, வெறுப்போ இல்லாமல் அமைதியை அடைகிறான்.

65.
ப்ரஸாதே சர்வ து:க்காநாம் ஹாநிர் அஸ்யோ பஜாயதே
ப்ரசந்ந சேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்ய வதிஷ்டதே
அந்த அமைதியில் அவனின் எல்லா துக்கங்களும் அழிகின்றன. அமைதியான மனதில் புத்தி நிலை கொண்டு ஸ்திரமாக இருக்கும்.

66.
நாஸ்தி புத்திர் அயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா 
ந சாபாவயத: சாந்திர் அசாந்தஸ்ய குத: ஸுகம்  
நிலை கொள்ளாத ஒருவனுக்கு ஆத்மத்தைக் குறித்த எந்த ஒரு ஞானமும் ஏற்படுவதில்லை. அவனால் எந்த ஒரு தியானமும் செய்ய முடியாது. தியானம் செய்ய முடியாதவர்களுக்கு எந்த அமைதியும் ஏற்படாது. அமைதி இல்லாத ஒருவனுக்கு எப்படி சந்தோசம் ஏற்படும்,

67.
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ(அ)நுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவம் இவாம்பஸி 
சூறாவளியில் காற்று எப்படி நீரில் ஒரு படகை தடுமாற வைக்கிறதோ, அது போல அலை பாயும் இந்திரியங்களைப் பின் தொடரும் மனமானது அதன் பகுத்தறிவையும் அலைக்கழித்து விடுகிறது. 

68.
தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ரு ஹீதாநி ஸ்ர்வச:
இந்த்ரியாண் இந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா 
மஹா வல்லமை கொண்ட அர்ஜுனா! எவன் ஒருவன் இந்திரியங்களில் இருந்து புலன் அடக்கம் பெற்றுள்ளானோ, அவனின் அறிவு நிலையாக இருக்கும்.

69.
யா நிசா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிசா பச்யதோ முநே:
எல்லா உயிர்களுக்கும் இரவாக இருக்கும் போது, இந்தப் புலனடக்கம் பெற்றவன் விழிப்புடன் இருப்பான். எல்லா உயிர்களும் பகலில் விழித்து இருக்கும் போது, இந்த ஞானிகளுக்கு இரவாக இருக்கும்.

70.
ஆபூர்யமாணம் அசல பிரதிஷ்டம் ஸமுத்ரம் ஆப: ப்ரவிசந்தி யத்வத்
தத்வத் காமா யாம் ப்ரவிசந்தி ஸர்வே ஸ சாந்திம்ஆப்நோதி ந காமகாமீ
சமுத்திரத்தில் நதி சேரும் போதும் அந்த சமுத்திரம் மாற்றம் இல்லாமல் இருப்பது போல, எவன் ஒருவனுள்ளே ஆசைகள் எல்லா திசைகளில் இருந்தும் நெருக்கினாலும், அவன் அசைந்து கொடுக்காமல் நிலையாக இருப்பானோ, அவனே மன அமைதியைப் பெறுகிறான். ஆனால் மனம் முழுக்க ஆசைகளைக் கொண்டவன் அந்த அமைதியைப் பெறுவது இல்லை.

71.
விஹாய காமாந்ய: ஸர்வாந் புமாம்ச்சரதி நி: ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்திம் அதி கச்சதி
எல்லா ஆசைகளையும் துறந்து, எந்த ஏக்கமும் இல்லாமல், தான், தனது என்ற உணர்வு இல்லாமல் இருக்கும் அவனே அமைதியை அடைகிறான்.

72.
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ் யாமந்த காலே(அ)பி பிரம்ம நிர்வாணம் ருச்சதி
ப்ருதாவின் புத்திரனே! இது தான் பிரம்ம நிலை. இந்த நிலையில் எவருமே மயங்குவதில்லை. இதிலே நிலை கொண்ட பின்னர், ஜீவனின் இறுதியிலும் ஒருவன் பிரம்மத்தில் (ஆத்மாவில்) கலக்கிறான். 

ஹரி ஓம் தத் ஸத்:
ஹரியே பரம்பொருள் - அதுவே உண்மை 

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஸாங்க்ய யோகோ நாம த்விதீயோத்யாய:  
இது ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத், பிரம்மத்தைப் (ஆத்மாவைப்) பற்றிய கல்வி, யோக சாஸ்திரம் (வாழ்க்கையில் செல்ல வேண்டிய பாதையை குறிக்கும் நூல்), ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் இடையே நடந்த உரையாடல், ஸாங்க்ய  யோகம் என்ற இரண்டாம் அத்தியாயம்.

விசாரம்
முன்பே பார்த்தோம் - குந்தியின் இன்னொரு பெயர் ப்ருதா. பின்னர் குந்திபோஜனுக்கு தத்து கொடுக்கப்பட்டதால் அவளின் பெயர் குந்தி ஆனது. அவளின் பிள்ளையானதால், அர்ஜுனனுக்கு பார்த்தன் என்ற பெயர். ஸ்ரீ கிருஷ்ணர் குந்தியை அத்தை என்றே அழைப்பார். பிறப்பில் அவளும் வசுதேவரின் சஹோதரி தானே. அது போல அர்ஜுனனை பிரியமாக அழைப்பதும் பார்த்தா, கௌந்தேயா என்று தான். அப்படி பார்த்தனுக்கு சாரதியாக இருந்ததால் தான் கிருஷ்ணருக்கு பார்த்தசாரதி என்ற பெயர். பக்தன் ஒருவனின் பெயரால் அவருக்கு இந்த நாமம்.

69 ம் ஸ்லோகத்தின் உள்ளார்த்தம் -ஆசைகளைக் கொண்டு அஞ்ஞானத்தில் இருப்பவர்கள் அஞ்ஞானிகள். அவர்கள் விழிப்புடன் இருக்கும் நேரம் (பகல்) என்றால் சுக போகத்தில் இருக்கும் நேரம். அந்த சமயத்தில் ஞானிகள் எப்படி இருப்பார்கள்? ஆத்ம விசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுக போகத்தைக் கண்டு கொள்ளாமல் கண் மூடி (இரவில்) இருப்பார்கள். அதே சமயம் ஞானிகள் பிரம்மத்தைக் காணும் போது (பகல்), அஞ்ஞானிகள் அதைப் பார்க்க முடியாமல் கண் மூடியவர்களாக (இரவு) இருக்கிறார்கள்.

நாம் நமது அன்றாட வாழ்வில் சந்திக்கும் மிகச் சாதாரண சூழ்நிலை இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி, மதிப்புள்ளதோ, மதிப்பு இல்லாததோ, உயிர் உள்ளதோ, இல்லாததோ முதலில் அது நமக்கு கிடைப்பதற்கு முன்னால் நமக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. அதை அடக்க முடியாத போது அந்த ஈர்ப்பு அந்த பொருள் மீது ஒரு வெறி கொள்ள வைக்கிறது. அது நியாயமான வெறி என்றால் ஓரளவுக்கு சரி எனலாம். இல்லாத போது, நியாயமாக இருந்தாலுமே கிடைக்காத போது நமக்கு அந்த வெறி கோபமாக மாறுகிறது, கோபம் வந்தவுடன் மனதில் ஒரு குழப்பம் வந்து, நல்லதா, கெட்டதா என பிரித்து அறியும் முதிர்ச்சி தொலைகிறது. இந்த கோபம் அழிவுக்கு காரணம் ஆகிறது. அப்படி இல்லாமல் இந்த ஆசை ஏற்படாமல் முதலிலேயே அடக்கி விட்டால் இந்த chain reaction ஏற்படாமல் அழிவு வராமல் போகும் இல்லையா? நம்மில் எதனை பேர் க்ஷண நேர கோபத்தில் வாழ்கையை அழித்துக் கொண்டுள்ளோம்.

இந்த ஆசைகளை அடக்குவதினால் நமது இந்திரியங்களும் அடங்குகின்றன. அலை பாயாத மனம் இருக்கும் போது தியானம் செய்ய முடிகிறது. தியானம் நிர்வாணத்திற்கு (மன அமைதிக்கு) கொண்டு செல்கிறது. இப்படி சாந்தி நிலையை அடைந்தால் மனதில் எப்படி ஏக்கம் தோன்றும்? இந்த உன்னத நிலையே பிரம்ம நிலை.  அப்படி பிரம்ம நிலையை அடைந்த ஒருவன் அவனின் ஜீவித காலம் முடிந்த பின்னர் அந்த பிரம்மத்திலேயே ஒன்றாகிறான். ஜீவாத்மாவாக இருந்த அவன் இந்த சித் எனப்படுகிற நிலையை அடையும் போது அவனுள்ளே ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. எந்த ஒரு material comfort ம் கொடுக்க முடியாத பேரானந்த நிலை. இப்படி பரமாத்மாவோடு இரண்டறக் கலப்பது தானே நமது அத்வைதத்தின் சாரம்.    

Monday, September 26, 2011

Chapter 2 - Saankhya Yoga [51-61]

51.
கர்மஜம் புத்தியுக்தா ஹி ப(फ)லம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்ம பந்த விநிர்முக்தா: பதம் கச்சந்த்ய நாமயம்
அறிவுள்ளவர்கள் ஞானத்தைப் பெற்று, தங்கள் செயல்களின் பலன்களை துறந்து, (மறு) பிறப்பு என்ற தளையில் இருந்து விடுபட்டு, எந்த ஒரு தீங்கிற்கும் அப்பால் உள்ள இடத்திற்குச் செல்வார்கள்.

52.
யதா தே மோஹகலிலம் புத்திர் வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச
உனது அறிவு, மாயை என்னும் குழப்பத்தைத் தாண்டும் போது, நீ இது வரை கேட்டதையும், கேட்கப் போவதையும் குறித்து எந்த விதமான வேதனையும் கொள்ளாது.

53.
ஸ்ருதி விப்ரதி பந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிச்சலா 
ஸமாதா வசலா புத்திஸ் ததா யோகம் அவாப்ஸ்யஸி
உனது அறிவு எதைக் கேட்டும் கலங்காமல், எப்பொழுது பிரம்மத்தில் உறுதியாக இருக்குமா, அப்பொழுது நீ யோகத்தை அடைவாய்.

54.
அர்ஜுந உவாச
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ
ஸ்திததீ : கிம் ப்ரபாஷேத கீமாஸீத வ்ரஜேத கிம்
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா: ஸ்தித பிரஜ்ஞன் எனப்படும் கலங்காத அறிவும், பிரம்மத்தில் கலந்தவனும் ஆன அவனைப் பற்றிய விளக்கம் என்ன? கலங்காத அறிவைக் கொண்ட ஒருவன் எவ்வாறு பேசுவான்? எப்படி உட்காருவான்? எப்படி நடப்பான்?

55.
ஸ்ரீ பகவான் உவாச
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த மநோகதாந்  
ஆத்மந்யேவ ஆத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ் ததோச்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது:
அர்ஜுனா! ஒருவன் மனதில் இருந்து எல்லா ஆசைகளையும் விலக்கி, தன் அளவில் அவன் திருப்தி அடைந்து இருக்கும் போது, அவன் உறுதியான அறிவைக் கொண்ட ஸ்தித பிரஜ்ஞன் ஆகிறான். 

56.
து:கேஷ்வநுத் விக்நமநா:  ஸுகேஷு விகதஸ் ப்ருஹ:
வீதராக பய க்ரோத: ஸ்திததீர் முநிர் உச்யதே
எவனுடைய மனம் கஷ்டம் ஏற்படும் போது கலங்காமல் இருக்குமோ, எவன் சுக போகங்களின் பின்னே செல்ல மாட்டானோ, எவன் பற்று, பயம், கோபம் இவற்றில் இருந்து விடுபட்டுள்ளானோ, அவன் ஸ்தித அறிவைக் கொண்ட முனிவன் ஆகிறான். 

57.
ய: ஸர்வத்ரா நபிஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய சுபாசுபம் 
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா
நல்லதோ, கெட்டதோ எதைச் சந்தித்தாலும் எவன் எங்குமே பற்றில்லாமல் இருக்கிறானோ, எவன் சந்தோசப்படவோ, வெறுக்கவோ இல்லையோ அவன் அறிவு கலங்காமல் இருக்கும்.

58.
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ (அ)ங்காநீவ ஸர்வச:
இந்த்ரியாண் இந்த்ரியார்தே(அ)ப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா:
தனது அங்கங்களை எல்லாம் எல்லாப் பக்கங்களிலும் ஒடுக்கிக் கொள்ளும் ஒரு ஆமையைப் போல எவன் தனது புலன்களை லௌகீக வஸ்துக்களில் இருந்து விலக்கிக் கொள்கிறானோ, அவன் அறிவு ஸ்திரமாக இருக்கும். 

59.
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸ வர்ஜம் ரஸோ(அ)ப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே  
லௌகீக வஸ்துக்கள் ஸ்திதப்ரஜ்ஞன் ஆன ஒருவனிடம் இருந்து விலகிச் செல்கின்றன. ஆனால் இவனிடம் அந்த ஏக்கம் தங்கி உள்ளது. அந்த ஏக்கமும் பரமாத்மாவைக் கண்ட உடன் விலகி விடுகிறது.

60.
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:
அர்ஜுனா! அறிவுள்ள மனிதன் ஒருவன், தனது புலன்களை அடக்க முயற்சி செய்தாலும் இந்த கலங்க அடிக்கும் ஆசைகள், அவன் மனதை கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றன.

61.
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா
அவன் புலன்களை அடக்கிய பின்னர், என்னைக் குறித்த தியானத்தில் அமர வேண்டும். அவன் புலன்கள் அடக்கப் படும் போது அவன் அறிவு ஸ்திரமாக இருக்கும்.

விசாரம் 
இந்த பலன்களின் மீதுள்ள ஆசைகளைத் துறப்பது எப்படி என்று பார்ப்போம். தீய செயல்களை செய்தால் அது பாவம், அதற்கான தண்டனை கிடைக்கும் என்று நாம் அதைச் செய்வதில்லை. செய்யவும் கூடாது. அதை விடுவோம். 

ஒரு நல்ல காரியம் செய்கிறோம். உதாரணமாக ஈஸ்வரனைக் குறித்து ஒரு ஸ்லோகத்தை பாராயணம் செய்கிறோம். ஒரு ஸ்லோகம் சொல்லும் போது அதற்கென ஒரு ப(फ)லஸ்ருதி இருக்கும். இந்தப் பலன் அந்த ஸ்லோகத்தை சொன்ன அவனுக்கு தனிப்பட்ட பலன் கொடுக்கும், கூடவே அந்த சமூகத்திற்கும் பலன் கொடுக்கும். மழை நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு காட்டாமல் எல்லாருக்கும் பெய்வது மாதிரி இந்த பலனும் சமூகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும். ஒரு சைக்கிள் ஓட்டும் போது pedal செய்வதை நிறுத்தினாலும் முந்தய momentum கொண்டு அது சில தூரம் போவது மாதிரி, கஷ்ட காலத்திலும் முன்பு செய்த புண்ணிய பலன்கள் நம்மை முன்னே செல்ல உதவி செய்யும். இந்த பலஸ்ருதி எதனால் இருக்கிறது என்றால், ஆரம்பத்தில் ஒருவன் இந்த ஸ்லோகத்தின் மீது ஈடுபாடு கொண்டு ஸ்ரத்தையுடன் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான். இந்த தனிப்பட்ட பலன் மீது ஆசை கொள்ளாமல், நாம் அந்த பலனை ஈஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்து விட்டால், அந்த மன நிலையை நம்முள் கொண்டால், நாளாவட்டத்தில் அதை எல்லா செயல்களுக்கும் விரிவுபடுத்தி நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளலாம். அதனால் நாம் ஈஸ்வரனுக்குச் செய்யும் எல்லா பூஜையின் பலன்களை அவனுக்கே அர்ப்பணம் செய்வது பலன்களின் மீது ஆசை கொள்வதை விடும் முதல் படி.

ஸ்தித பிரஜ்ஞன் பற்றிய விளக்கத்தை அர்ஜுனன் கேட்க இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். நம் மனம் நாம் செய்யும் கடமையின் பலன் மீது உள்ள ஆசையைத் துறக்கும் போது ஜந்ம பந்தத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷத்தை, மறு பிறப்பிலாத நிலையை அடையலாம் என்கிறார். அப்படிப்பட்ட மன நிலையைக் கொண்டவன் எந்த ஒரு விஷயத்தாலும் சந்தோசம்/துக்கம், கொள்ள மாட்டான் என்பதைப் பார்த்தோம். நமது மனது ஒரு குரங்கைப் போன்றது -  எல்லாவற்றின் மீதும் ஆசை கொள்ளும். அது நிராசை ஆனால் அதனால் கோவப்படும். அந்த ஆசையின் காரணமாக துஷ்ட காரியங்கள் செய்யத் தூண்டுகிறது. சரி இதை எப்படி அடக்குவது. ஒரு உதாரணம் பார்ப்போம் -  ஒரு குரங்கை ஒரு நூறு அடி நீள கயிற்றால் கட்டி வைப்போம். அந்த குரங்கும் 100 அடி வட்டத்தில் உள்ள பரப்பளவில் சுற்ற முடிகிறது. அதற்கு வெளியே போனால் கயிற்றின் சுருக்கு அதை நெரிக்கும். சில மணி நேரங்களில் அந்த குரங்கு அந்த 100 அடி பரப்பளவிற்கு தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறது. இப்பொழுது, அந்த கயிற்றின் நீளத்தை 50, 25, 10, 1 அடி என்று  குறைத்துக் கொண்டே வருவோம். குரங்கும் அந்த குறைந்த பரப்பளவிற்கு வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. இந்த கயிறு என்பது நமது ஆசையைப் போன்றது. நாமும் நமது ஆசையை வயது ஏற ஏற ஒவ்வொன்றாக குறைத்துக் கொண்டே வருவோம். ஒரு சமயத்தில் இந்த material world மீது உள்ள ஆசை முற்றிலும் போய் விடும். கிடைத்ததை வைத்து திருப்தி கொண்டு, ஆசை, கோபம் இவற்றை நீக்கும் போது நாமும் அந்த பிறப்பற்ற நிலையை அடையலாம். அதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

Monday, September 19, 2011

Chapter 2 - Saankhya Yoga [41-50]

41.
வ்யவஸா யாத்மிகா புத்திர் ஏகேஹ குருநந்தந
பஹூ ஷாகா ஹ்யநந்தாச்ச புத்தயோ (அ)வ்யவஸாயிநாம் 
கு(k)ரு வம்சத்தின் கொழுந்தே! இங்கே ஒரு ஒன்றுபட்ட(focussed) உறுதி உள்ளது. உறுதி இல்லாதவர்களின் எண்ணங்கள் பல கிளைகளைக் கொண்ட முடிவில்லாத ஒன்றாக உள்ளது.

42. 
யாம் இமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபச்சித: 
வேதவாத ரதா: பார்த நாந்யத் அஸ்தீதி வாதிந:
அறிவற்றவர்கள் பேசும் வார்த்தைகள், மலரைப் போன்ற அலங்காரச் சொற்களைக் கொண்டது. அர்ஜுனா! அவர்கள் வேதத்தின் மந்திரங்களை மட்டுமே புகழ்ந்து, வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்பவர்கள். 

43.
காமாத் மாந: ஸ்வர்கபரா ஜன்ம கர்ம ப(फ)லப்ரதாம்
க்ரியா விஷேஷ பஹூலாம் போக ஐஸ்வர்யகதிம் ப்ரதி
ஆசைகளை அதிகம் கொண்டு, ஸ்வர்கமே தங்களின் லட்சியமாக அவர்கள் வைத்துள்ளார்கள். அவர்கள் பேசும் வார்த்தைகள் ஒருவரின் செயல்களே அவர்களின் (மறு)பிறப்பைத் தரும் வெகுமதி என்று சத்தியம் செய்கிறது.  அவர்கள் பல சுகம், செல்வம் மற்றும் பதவி பெறுவதற்கு வேண்டிய குறிப்பிட்ட செயல்களை விவரிக்கிறார்கள்.

44.
போக ஐஸ்வர்ய பிரஸக்தாநாம் தயா பஹ்ருத சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே 
சுகம் மற்றும் செல்வம் ஆகியவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள், இந்த உபதேசங்களால் ஈர்க்கப் படுகிறாகள். இவர்களுடைய புத்தி, தியானம் மற்றும் சமாதி நிலையில் நிலைத்து நிற்க முடியாது.

45.
த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்
வேதங்கள் இயற்கையின் மூன்று குணங்களை விவரிக்கின்றது. அர்ஜுனா! நீ இந்த மூன்று குணங்களுக்கும் மேலாக இரு. நேர்மறையான ஜோடிகளை (வெப்பம்-குளிர், சுகம்-துக்கம் போன்றவை) விலக்கி, சத்வ குணம் ஒன்றையே  கொண்டு, பொருள் சேர்த்தல், அதைக் காப்பாற்றுதல் போன்ற எண்ணங்களில் இருந்து விலகி இருந்து, ஆத்மாவை வெற்றி கொண்டவனாக இரு. 

46.
யாவா நர்த உதபாநே ஸர்வத :ஸம்ப்லு தோதகே
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராமணஸ்ய விஜாநத:
வெள்ளம் சூழ்ந்த இடத்தில் எப்படி ஒரு நீர் அணைக்கட்டின் பயன் இருக்குமோ, அப்படியே வேதமும் (அதன் ஞானமும்) ஆத்மாவை அறிந்த பிராமணனுக்கு இருக்கும். 

47.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ப(फ)லேஷு கதாசந
மா கர்மப(फ)ல ஹேதுர்பூர் மா தே ஸங்கோ(அ)ஸ்தவ கர்மணி
செயலைச் செய்வதற்கு மட்டுமே உனக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலன்களின் மீது உரிமை எடுத்துக் கொள்ள அல்ல. உனது குறிக்கோள் அந்தச் செயல்களின் பலன்கள் மீது இருக்க வேண்டாம். அதே சமயம் உனது பற்றுதல் செயலின்மை மீதும் இருக்க வேண்டாம். 

48.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்சய 
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே
அர்ஜுனா!. பற்றுகளை விலக்கி, வெற்றி / தோல்வியை சமமாகப் பாவித்து யோகத்தில் உறுதியாக இருந்து செயலைச் செய். மனதின் சம நிலைப்பாடே யோகம் எனப்படுகிறது. 

49.
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தி யோகாத் தநஞ்ஜய
புத்தௌ சரணம் அந்விச்ச க்ருபணா: ப(फ)ல ஹேதவ:
அர்ஜுனா! புத்தி யோகத்தை விட மிகவும் தாழ்ந்த நிலையில் செயல் இருக்கின்றது. நீ அந்த அறிவில் சரணம் அடை. பலன்களே குறிக்கோளாகக் கொண்டவர்கள் மிகவும் கீழானவர்கள். 

50.
புத்தி யுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத துஷ்க்ருதே
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்
சம நிலை கொண்ட மனதுடன் கூடிய அறிவைக் கொண்டு ஒருவன் இந்த வாழ்கையின் நல்ல மற்றும் தீய செயல்களைத் தொலைக்கின்றான். அதனால் உன்னை யோகத்தில் ஈடுபடுத்திக் கொள். யோகம் என்பது செயலில் வித்தகனாக இருப்பது. 

விசாரம்
முன்பே பார்த்தோம் பகவத் கீதை மற்றும் உபநிஷத்கள் வேதாந்தம் என்ற பகுதியில் வருபவை. வேதம் + அந்தம் - அதாவது வேதத்தின் இறுதிப் பகுதியில் வருவதால் வேதாந்தம். வேதத்தில் முற் பகுதி கர்ம காண்டம் எனப் படுகிறது. அதில் ஒரு பலனை அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று வரும். உதாரணமாக புத்திர காமேஷ்டி யாகம், அஸ்வமேத யாகம் - இதெல்லாம் புத்திர பாக்கியம், சாம்ராஜ்ய பாக்கியம் வேண்டி அதற்குரிய நியதிகளைப் பின்பற்றி செய்யப்படுகிறது. இப்படிப் பட்ட செல்வங்களைப்/ பலன்களைப் பெறும் ஆசை உள்ளவர்கள் இந்த செயல்களைச் செய்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே வேதத்தைக் குறைவாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த கர்மம் / பலன்கள் இதிலேயே இருக்காமல் அதற்கு அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார். இப்படி ஒரு செயலைச் செய்தால் என்ன பலன் என்று பார்த்து பார்த்து செய்தால் மனம் தியானம் மற்றும் சமாதி நிலையை எப்படி எட்டும் என்கிறார். 

வேதத்தில் மூன்று குணங்கள் விவரிக்கப் படுகிறது - சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ். (பின்னால் இதை குறித்த ஒரு அத்தியாயமே உள்ளது, அதில் விரிவாகப் பார்க்கலாம்). சத்வ குணத்தில் இருந்தால் நேர்மறை ஜோடிகளான குளிர்/வெப்பம், சுகம்/துக்கம், வெற்றி/தோல்வி, கீர்த்தி/அகீர்த்தி, புகழ்ச்சி/இகழ்ச்சி எதுவுமே மனதை பாதிக்காது. இப்படிப்பட்ட மன நிலை கொண்ட ஒருவனுக்கே ஆத்மாவை வெற்றி கொண்டு தன் வசப்படுத்த முடியும். இத்தகைய அறிவைக் கொண்ட யோகத்தைத் தான் அர்ஜுனன் தன் மனதில் கொண்டு இங்கே செயலில் (போரில்) ஸ்ரீ கிருஷ்ணர் ஈடுபட வைக்கின்றார். 

பகவத் கீதை உபதேசம் என்ற உடனே நமக்கு எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த 47 வது ஸ்லோகம் - 'கடமைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்னும் அர்த்தத்தைக் கொண்டது. சிலர் என்ன நினைக்கிறார்கள் - சரி பலன் இல்லாவிட்டால் நாம் செயலே செய்ய வேண்டாம் என்று. அதனால் தான் அந்த ஸ்லோகத்தின் கடைசிப் பகுதியில் அதற்காக செயலில் ஈடுபடாமல் இருந்து விடாதே என்று கூறுகிறது. 

இங்கே இரண்டு அர்த்தம் கொள்ளலாம் - ஒன்று அதன் பலன்களில் இஷ்டப்படாமல் கடமையை நிஷ்காமமாகச் செய்வது. இன்னொன்று தன்னால் தான் இந்த செயல் செய்யப்பட்டது, தான் இல்லை என்றால் இந்த செயலே நடந்திருக்காது என்ற எண்ணத்தைத் தொலைப்பது. 
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளின் குணத்தைப் பற்றி வரும் போது நிஷ்காமா என்று வரும். நாம் வாழ்க்கையில் மூன்று விதமான கடமைகளைச் செய்கிறோம் - தனக்காகச் செய்வது, தன் குடும்பத்திற்குச் செய்வது, மூன்றாவது பூர்த்த கர்மா எனப்படும் சமூக சேவை. நமது எல்லாச் செயலுமே இந்த மூன்றில் ஒன்றிலோ, இல்லை இரண்டிலோ, இல்லை எல்லாவற்றின் கீழோ வரும். தனக்காகச் செய்ய வேண்டியது பிடிக்கின்றதோ இல்லையோ செய்து தான் ஆக வேண்டும். மற்ற  இரண்டிலும் நமக்கு ஒரு choice இருக்கலாம், இல்லாமல் போகலாம். சில சமயம் நமக்குப் பிடிக்காமல் இருந்தாலும் செய்தே ஆக வேண்டும். இப்படி பற்றில்லாமல் ஒரு detached attachment கொண்டு செய்வது தான் நிஷ்காம கர்மா. 
இரண்டாவது பலனின் கீர்த்தியில் பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடாது. சிலர் என்ன நினைக்கின்றோம் - 'ஆகா நான் இல்லைனா இந்த வேலையே நடந்திருக்காது' என்று. நாம் அந்தச் செயலைச் செய்யா விட்டாலும் அந்தச் செயல் விதிக்கப் பட்டிருந்தால் அது வேறு யார் மூலம் ஆவது நடந்து விடும். நாம் அந்தச் செயலை செய்யும் ஒரு நிமித்தம் / கருவி மட்டும் தான். இந்த தான் என்ற எண்ணம் நீங்கி விட்டால் செயலின் பலனில் ஒரு ஆசை வராது. தான் இல்லாவிட்டால் வேறு யாரோ செய்யப் போகிறார்கள். நமக்கு அதைச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதை நன்றாகச் செய்வோம் என்று மட்டும் நினைக்க வேண்டும். 

Tuesday, September 13, 2011

Chapter 2 - Saankhya Yoga [31-40]

31.
ஸ்வதர்மம் அபி சாவேக்ஷ்ய ந விகம்பிதும் அர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ (அ)ந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே
மேலும் உனது கடமையைக் கருத்தில் கொண்டு, நீ தடுமாறக் கூடாது. ஒரு க்ஷத்ரியனுக்கு தர்மத்திற்காகச் செய்யப்படும் யுத்தத்திற்கு மேலாக வேறு ஒன்றும் இல்லை.

32.
யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்க த்வாரம் அபாவ்ருதம்
ஸுகீந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தம் ஈத்ருஷம்
அர்ஜுனா! இப்படிப்பட்ட யுத்தத்தில் போர் புரிய அழைக்கப்பட்ட க்ஷத்ரியர்கள், அது சுவர்க்கத்தின் வாயிற் கதவாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். 

33.
அத சேத்த்வம் இமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி
ஆனால் ஒரு வேளை நீ இந்த தர்ம யுத்தத்தில் போர் செய்யவில்லை என்றால், அப்பொழுது நீ உனது கடமையை தவறி, புகழை இழந்து, பாபத்தைச் சேர்ப்பாய்.

34.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே(அ)வ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சா கீர்திர் மரணாத் அதிரிச்யதே
மக்களும் உனது இந்த நீங்கா இழிவை மறக்காமல் இருப்பார்கள். புகழப்பட்ட ஒருவனுக்கு, இழிவு மரணத்தை விடக் கொடுமையானது.

35.
பயாத் ரணாத் உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்
சிறந்த மஹா ரதர்கள் நீ பயத்தினால் போரில் இருந்து விலகியதாக எண்ணுவார்கள். உன்னைப் பற்றி உயர்வாக நினைக்கும் அவர்கள், இனி உன்னை குறைவாக மதிப்பிடுவார்கள்.

36.
அவாச்ய வாதாம்ச்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்
உனது பலத்தைக் கேலி செய்து உன் எதிரிகள் உன்னை பார்த்து திட்டுவார்கள். இதை விட வேறு என்ன வலி மிக்கதாக இருக்க முடியும்?

37.
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் 
தஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருத நிச்சய:
ஒரு வேளை நீ வென்றால் உனக்கு சுவர்க்கம் கிடைக்கும். வெற்றி பெற்றவனாக நீ உலகை அனுபவிக்கலாம். அதனால் குந்தியின் புத்திரனே! போர் செய்ய உறுதி கொள்.

38.
ஸுக து:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸ்யஸி
சுகமோ, துக்கமோ, லாபமோ, நஷ்டமோ, வெற்றியோ, தோல்வியோ - இதை சமம் ஆக பாவித்து, யுத்தத்திற்காக போர் செய். நீ பாவத்தைச் சேர்க்க மாட்டாய்.

39.
ஏஷா தே(அ)பிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி 
உனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இது சாங்க்யம் என்பதைக் குறித்த அறிவாகும். இனி யோகம் குறித்த அறிவை நீ கேள். இதன் மூலம் அர்ஜுனா! நீ கர்மத்தினால் எழும் பந்தத்தை உதறி விட முடியும்

40.
நேஹா பிக்ரம நாசோ(அ)ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே 
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்
இதனால் எந்த ஒரு செயல் இழப்பும் ஏற்படாது. எந்த ஒரு தீங்கும் இல்லை. இதைக் குறித்த சிறிய ஞானமும் ஒருவனை அவனது பெரும் அச்சத்தில் இருந்து காப்பாற்றும்.

விசாரம்
புருஷ சூக்தத்தில் நான்கு வர்ணங்களின் தோற்றம் பற்றி வருகிறது. பிரக்ருதியின் (இயற்கையின்) படைப்பில் புருஷாவின் (கடவுளின்)  முகத்தில் இருந்து பிராமண வர்ணம், தோளில் இருந்து க்ஷத்ரிய வர்ணம், தொடையில் இருந்து வைஷ்ய வர்ணம், பாதத்தில் இருந்து சூத்ர வர்ணம் என்று தோன்றியதாம். இது அந்த காலத்திய division of labour. அதில் க்ஷத்ரியனுக்கு சமூகத்தைக் காக்கும் பொறுப்பு. தர்மத்தை காக்க வேண்டியது அவனது கடமை.
அதர்மத்திற்காக போர் செய்யக் கூடாது - அதற்காக நியாயத்திற்காக போர் செய்யாமல் விடவும் கூடாது. அப்படி தர்மத்திற்காக யுத்தம் செய்து அவனுக்கு மரணம் சம்பவித்தால் அதை விட அவனுக்கு வேறு பெருமை எதுவும் கிடையாது. அவன் போரில் புற முதுகு காட்டினால் அதை விடவேறு சிறுமை அவனுக்கு இல்லை.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மாவைப் பற்றிய அறிவிற்கு அடுத்து - குல தர்மத்தை நிலை நாட்டும் இந்த அவசியத்தை விளக்குகிறார். அர்ஜுனன் ஒன்றும் சந்நியாசி இல்லை. ராஜ வம்சத்தில் வந்தவன். அவனுக்கு தனது குலப் பெருமையை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. துர்யோதனனோ எப்பொழுது, எப்படி பாண்டவர்களின் நிலத்தை அபகரிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது அர்ஜுனன் போர் செய்ய தயங்கினால் அவன் கௌரவர்களின் படை பலத்தைக் கண்டு அஞ்சி தான் இப்படி பின் வாங்கினான் என்று எதிரிகள் அவனைக் கேலி செய்வார்கள். இது வரை பாராட்டப்பட்ட அர்ஜுனனுக்கு இதை விட வேறு என்ன இழிவு இருக்க முடியும். அவமானம் மரணத்தை விடக் கொடுமையானதே.

சென்ற வாரம் ஸ்தித பிரக்யன் என்ற ஒருவனைப் பற்றி பார்த்தோம். ஜனனம், மரணம் இரண்டையும் சமமாகப் பாவிப்பவன் அவன். அவன் அதை மட்டும் அல்ல - சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி இதையும் சமமாகப் பாவிப்பான். இப்படி ஒரு நிலையை அடைய என்ன வேண்டும்? நாம் செய்யும் கர்மாக்களின் பலன்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் - அதற்காக கர்மாவே செய்யக் கூடாது என்று அர்த்தம் இல்லை. கர்மாவைச் செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் கடமை தவறியவன் ஆகிறோம். முன்பு பார்த்தோமே உடலைக் குறித்த detached attachment - அது இங்கே நம் கர்மாவின் மீதும் வேண்டும். ஆத்மா உறைய ஒரு கருவியாக உடல் இருக்கிறது. அது போலவே கர்மா என்ற ஒன்றைச் செய்ய கர்த்தா என்ற கருவி அவசியப்படுகிறது. இதைக் குறித்த அறிவு கர்ம யோகமாக அடுத்து வருவது. 

Tuesday, September 6, 2011

Chapter 2 - Saankhya Yoga [21-30]

21.
வேதாவிநாசிநம் நித்யம் ய ஏநம் அஜம் அவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்
அந்த ஆத்மாவானது அழிக்க முடியாதது, நிரந்தரமானது, பிறப்பில்லாதது, குறைவே இல்லாதது என்பதை அறிந்த ஒருவன் எவ்வாறு கொல்பவன், அல்லது கொல்லப்பட்டவன் ஆவான் அர்ஜுனா!

22.
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோ(அ)பராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணாநி அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ
எப்படி மனிதன் ஒரு பழைய உடையைக் களைந்து புதிய உடையைப் போட்டுக் கொள்கிறானோ, அப்படியே ஆத்மாவும் பழைய உடலைக் களைந்து, புதிய உடலில் நுழைகின்றது.

23.
நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந சோஷயதி மாருத:
அந்த ஆத்மாவை ஆயுதத்தால் வெட்ட முடியாது, அக்னியினால் எரிக்க முடியாது, நீரினால் நனைக்க முடியாது, காற்றினால் உலர்த்த முடியாது

24.
அச்சேத்யோ(அ)யம் அதாஹ்யோ(அ)யம் அக்லேத்யோ(அ)சோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுர் அசலோ(அ)யம் ஸநாதந:
இந்தப் பரம்பொருளை வெட்டவோ, எரிக்கவோ, ஈரப்படுதவோ, உலர்த்தவோ முடியாது. அது சாஸ்வதம் ஆனது, அனைத்திலும் ஊடுருவி இருப்பது, நிலையானது, புராதனமானது, அசைக்க முடியாதது

25.
அவ்யக்தோ(அ)யம் அசிந்த்யோ(அ)யம் அவிகார்யோ(அ)யம் உச்யதே
தஸ்மாத் ஏவம் விதித்வைநம் நாநுசோசிதும் அர்ஹசி
இது எழுதப்படாதது, நினைக்க முடியாதது, மாற்றம் இல்லாதது. அதனால் இது இப்படித் தான்  என்று அறிந்த பின்னர் நீ வருந்தக் கூடாதது.

26.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் சோசிதும் அர்ஹசி
பெருந்தோள் கொண்டவனே! ஒரு வேளை நீ இதை மீண்டும் மீண்டும் பிறந்து, இறக்கும் ஒன்றாக நினைத்துக் கொண்டாலும் நீ அதற்காக வருத்தப் படக் கூடாது.

27.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர் த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச  
தஸ்மாத் அபரிஹார்யே(அ)ர்தே ந த்வம் சோசிதும் அர்ஹசி
பிறந்த எல்லாவற்றிற்கும் இறப்பு என்ற ஒன்று நிச்சயமானது. அப்படியே இறந்த ஒன்றிற்கு பிறப்பு என்பதும் நிச்சயமானது. நிச்சயம் ஆன இது குறித்து நீ வருத்தப்படக் கூடாது.

28.
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தம் அத்யாநி பாரத
அவ்யக்த நிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா
உயிர்கள் ஆரம்பத்தில் விளக்க முடியாததாக உள்ளது. அர்ஜுனா! அவை அவற்றின் நடுப் பிராயத்தில் விளக்க முடிபவை ஆக உள்ளன. மீண்டும் அவற்றின் இறுதியில் விளக்க முடியாதவை ஆகி விடுகின்றன. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?

29.
ஆச்சர்யவத் பஷ்யதி கச்சித் ஏநம் ஆச்சர்யவத் வததி ததைவ சாந்ய:
ஆச்சர்யவச்சைநம் அந்ய: ஸ்ருணோதி ஸ்ருத்வா(அ)ப்யேநம் வேத ந சைவ கச்சித்
ஒருவன் இந்த ஆத்மாவை அதிசயமாகப் பார்கிறான், இன்னொருவன் இதை அதிசயமாகப் பேசுகிறான், இன்னொருவன் இதை அதிசயமாகக் கேட்கின்றான். இருந்தும் இதை எல்லாம் கேட்டும், ஒருவனும் இதைப் புரிந்து கொள்வதில்லை.

30.
தேஹீ நித்யம் அவத்யோ(அ)யம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத் ஸர்வாணி பூதாநி ந த்வம் சோசிதும் அர்ஹசி
அர்ஜுனா! எல்லோரின் உடலிலும் உள்ளே உறைந்திருக்கும் இந்த ஆத்மாவானது அழிக்க முடியாதது. எனவே எந்த ஒரு படைப்பிற்காகவும் நீ வருத்தப்படக் கூடாது.

விசாரம்
சென்ற வாரம் பார்த்ததைப் போல இதிலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மா பற்றிய விளக்கத்தைத் தொடர்கின்றார். 

அர்ஜுனன் கௌரவர் சேனையில் உள்ள ஆச்சார்யர் துரோணர், க்ருபாசாரியார்,    பீஷ்மர் மற்றும் பிற நண்பர்களை / உறவினர்களை சரீர உடலில் காண்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அவனது கண்ணோட்டத்தை மாற்றி அந்த சரீர உடல் உள்ளே இருக்கும் ஆத்மாவைக் காண வைக்கின்றார். அந்த ஆத்மாவிற்கு அழிவு என்ற ஒன்று இல்லாத போது அர்ஜுனன் எப்படி அவர்களை அழித்தவன்/கொல்பவன் ஆவான். அதைப் போல அர்ஜுனன் உடல் உள்ளேயும் ஆத்மா இருக்கிறது. அவன் ஒரு வேளை போரில் கொல்லப்பட்டாலும் அவன் எப்படி கொல்லப்பட்டவன் ஆவான்? அவர்களின் உள்ளே இருக்கும் ஆத்மா இன்னொரு உடலினில் செல்லப் போகிறதே? பிறகு ஏது அழிவு?
இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் அவன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியைக் களைய முயற்சிக்கிறார். அர்ஜுனனுக்கு இதில் இருக்கும் சந்தேகங்களைப் போக்கி பின்னர் அவனைப் போருக்குத் தயார் செய்கிறார். 

சென்ற வாரம் பார்த்த விஷயம் - சரீர உடலை ஒரு detatched attachment கொண்டு பார்ப்பது. இந்த சரீர உடல் இந்த ஆத்மாவைத் தாங்கி நிற்கும் ஒரு கருவி/ நிமித்தம் - அவ்வளவு தான். இந்த உடல் நாம் பிறப்பதற்கு முன்பாக என்னவாக இருந்தது? நம்மால் சொல்ல முடியாது. அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்திருக்கும். உறுதியாகத் தெரியாது. நாம் சரீர உடலைத் தாங்கி இருக்கும் போது அதற்கு ஒரு உருவம் கிடைக்கிறது. நாம் பாலகனாக, குமாரனாக, மத்திய வயது உடையவனாக, கிழவனாக ஆகும் போது அந்த அந்த நிலைக்கான உடல் இருக்கிறது. அந்தந்த வயதிற்கு ஏற்ற கூன், நரை விழுகிறது. இறந்த பின்னர் இந்த உடல் என்னவாக ஆகிறது? அதுவும் தெரியாது. எரித்தால் ஆறு கைப்பிடி, புதைத்தால் ஆறடி. மீண்டும் பஞ்ச பூதத்தில் கலக்கின்றது. இதைத் தான் 28 ம் ஸ்லோகம் விளக்குகிறது.

இந்த ஆத்மாவை நன்கு அறிந்தவர் என்று யாரும் இல்லை. குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து யானை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று கற்பனையில் இருப்பதைப் போல இருக்கிறோம். இத்தகைய ஆத்மா என்ற ஒன்றை நன்கு உணர்ந்த ஒருவன் அதிசயப் பிறவி. அவ்வளவு கடினமானது. அப்பேர்ப்பட்ட ஒருவனே பிறப்பு குறித்து சந்தோஷிக்காமலும், இறப்பு குறித்து துக்கப்படாமலும் இருப்பான். அவனே ஸ்திதப் பிரக்யன்.