Wednesday, February 22, 2012

Chapter 6 - Dhyaana Yoga [21-29]

21.
ஸுகம் ஆத்யந்திகம் யத்தத் புத்தி க்ராஹ்யம் அதீந்த்ரியம் 
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதச்சலதி தத்த்வத:
யோகியானவன் இந்த்ரியங்களைத் தாண்டிய, நிர்மலமான அறிவைக் கொண்டு அந்த பரமானந்த நிலையை உணரும் போது, அதில் நிலை கொள்ளும் போது அவன் உண்மை நிலையில் இருந்து அசைவதில்லை.

22.
யாம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:
யஸ்மிந் ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே
இதை அடைந்த உடனே அவன் வேறு எந்த லாபத்தையும் இதை விட உயர்வானதாக எண்ணுவதில்லை. இதில் நிலை கொண்ட பின் அவன் பெரும் துக்கத்திலும் அசைந்து கொடுப்பதில்லை.

23.
தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோகா ஸஞ்ஜ்ஞிதம் 
ஸ நிச்சயேந யோக்தவ்யோ யோகோ(அ)நிர்விண்ண சேதஸா 
இது வலிகளின் கட்டில் இருந்து விடுபடும் யோகம் என்ற  பெயரில் அழைக்கப் படட்டும். இதை உறுதியுடன், தளர்வில்லாத மனதுடன் பயிற்சி செய்ய வேண்டும்,

24.
ஸங்கல்ப ப்ரபவாந் காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநசேஷத:  
மனஸைவேந்த்ரியக் க்ராமம் விநியம்ய ஸமந்தத:
சங்கல்பம்(விருப்பம்) என்ற ஒன்றால் எழும் எல்லா ஆசைகளையும் பாரபட்சமின்றி தொலைத்து, எல்லா திசைகளிலும் உள்ள இந்திரியங்களையும் மனதால் முழுவதுமாகக் கட்டுப்படுத்தி,

25.
சநை: சநைருபரமேத் புத்த்யா த்ருதி க்ருஹீதயா
ஆத்ம ஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்
புத்தியை நிலையாக வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக
அவன் அந்த அமைதியை அடையட்டும். மனதை பிரம்மத்தில்
நிலை நிறுத்திய பின்னர், அவன் வேறு எதையும் நினைக்காமல் இருக்கட்டும்.

26.
யதோ யதோ நிச்சரதி மநச் சஞ்சலம் அஸ்திரம்
ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்
எது அலை பாயும், நிலை இல்லாத மனதை தடுமாற வைக்கிறதோ, அதில் இருந்து அவன் மனதைக் கட்டுப்படுத்தி, அதை பிரம்மத்தின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே கொண்டு வரட்டும்.

27.
ப்ரசாந்தம் அநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகம் உத்தமம்
உபைதி சாந்தரஜஸம் ப்ரஹ்ம பூதம் அகல்மஷம்
மிகவும் மன அமைதி கொண்ட, ஆசைகள் சாந்தப்படுத்தப் பட்டு எவன் பிரம்மமாகவே ஆனானோ, எவன் பாவங்களில் இருந்து விடுதலை பெற்றானோ, அந்த யோகிக்கு பரமானந்த நிலை நிச்சயம் கிடைக்கும்.

28.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகத கல்மஷ:
ஸுகேந ப்ரஹ்ம ஸம்ஸ்பர்சம் அத்யந்தம் ஸுகம் அச்நுதே
மனதை இவ்வாறு யோகத்தைப் பயிற்சி செய்வதிலேயே செலுத்தி, பாவங்களில் இருந்து விடுபட்டு, பிரம்மத்தின் தொடர்பால் பரமானந்த நிலையை அந்த யோகி எளிதில் அனுபவிக்கின்றான்.

29.
ஸர்வ பூதஸ்தம் ஆத்மாநம் ஸர்வ பூதாநி சாத்மநி
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்சந:
மனம் இவ்வாறு யோகத்தினால் பக்குவப்பட்ட உடன், அவன் பிரம்மத்தை எல்லா உயிர்களிலும் உறைவதைக் காண்கிறான். எல்லா உயிர்களும் பிரம்மத்தில் காண்கிறான். அவன் எங்கும் ஒன்றையே (பிரம்மத்தையே) காண்கிறான்.

விசாரம்
பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன். இந்த பிரம்மத்தை உபதேசம் செய்வது பிரம்மோபதேசம் - உபநயனம். உப+நயனம் -
additional eyes.  அதனால் தான் பிரம்மோபதேசம் பெற்ற பிராமணன்
த்விஜா (இரண்டு முறை பிறந்தவன்) என்று அழைக்கப்படுகிறான்.  ஊரைக்  கூட்டி  யஜ்னோபவீதம் போட்டுக் கொள்வது முக்கியம் இல்லை, அந்த  உபநயனம்  நிகழ்ச்சியை ஸ்ரத்தையுடன்  செய்ய வேண்டும். வேதங்கள் இந்த பிரம்மத்தைப் பற்றி கற்றுக் கொடுக்கின்றன. அதை ஒழுங்காகக் கற்றுக் கொள்வதே இந்த உபநயனத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இந்த பிரம்மம் (ஆத்மா) என்பது என்ன?
ஆதி சங்கரர் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்ய சிஷ்யர்களுடன் போகும் போது எதிரே சிவபெருமான் சண்டாள ரூபத்தில் தோன்றுவார். ஆதி சங்கரரோ சிவன் என்று தெரியாமல் அவரை விலகிச் செல்லுமாறு கூற, சிவனோ 'எதை விலகச் சொல்கிறாய்? இந்த உடலையா இல்லை அதனுள் உள்ள ஆத்மாவையா? உடல் என்றால் அது ஒரு அழியக் கூடிய மாமிச பிண்டம், ஆத்மா என்றால் அது எல்லோருக்குள்ளும் இருக்கும் பொதுவான ஒன்று. உன்னுள் இருக்கும் ஆத்மா தான் என்னுள்ளும் இருக்கிறது. அப்படி இருக்க நான் எப்படி உன்னில் இருந்து மாறுபட்டவன்' எனக் கேட்பார்.  ஆதி சங்கரரும் தன தவறை உணர்ந்து சிவனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மணீஷ பஞ்சகம் என்ற ஸ்லோகத்தைப் பாடுவார்.

ஒன்றாய் தோன்றி பலவாய் விரிந்து இருக்கும் இந்த பிரம்மம். ஒன்றாய் இருப்பது பரமாத்மா, பலவாய் விரிந்து இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மா பரமாத்வாவில் இருந்து தோன்றியது. இறுதியில் பரமாத்மாவிலேயே கலந்து விடுகிறது. எல்லா உயிர்களின் உள்ளும் இந்த பிரம்மம் (ஜீவாத்மா) தான் உள்ளது.  எல்லா உயிர்களும் பிரம்மத்தில் தான் (பரமாத்மா) உறைகிறது. இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்று தோன்றினாலும் ரெண்டும் தங்களின் பூரணத்துவத்தை  (completeness ) இழப்பதில்லை. இந்த ஸ்லோகத்தின் அர்த்தமும் இது தான்.
'ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே'

இந்த பிரம்மத்தைப் பற்றி அறிவது/அடைவது  ஒன்று தான் யோகிக்கு குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு மனப் பயிற்சி வேண்டும், எல்லாவற்றையும் சம திருஷ்டி கொண்டும் பார்க்கும் பார்வை வேண்டும். அதற்கு தான் மேலே சொன்ன பயிற்சி தேவைப் படுகிறது. அந்த பிரம்மத்தை அறிந்த நிலை அடைந்து விட்டால் தான் மனதில் பரமானந்த நிலை தோன்றும். அந்த நிலை அடைந்த பின்னர் எந்தக் கவலையும், ஆசையும் நம்மை அண்டாது. எவன் இந்த நிலையை அடைந்துள்ளனோ, அவனே உண்மையான பிராமணன்

No comments:

Post a Comment