Tuesday, February 28, 2012

Chapter 6 - Dhyaana Yoga [30-39]

30.
யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி
தஸ்யாஹம் ந பிரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி
எவன் ஒருவன் என்னை எங்கும் காண்கிறானோ, என்னுள் அனைத்தையும் காண்கிறானோ, அவன் என்னை விட்டுப் பிரிவதில்லை, நானும் அவனை விட்டுப் பிரிந்து இருப்பதில்லை.

31.
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வம் ஆஸ்தித:
ஸர்வதா வர்தமாநோ(அ)பி ஸ யோகீ மயி வர்த்ததே
எவன் ஒருவன் எல்லா உயிர்களிலும் உறையும் என்னை வணங்கி, இந்த ஐக்யத்தில் நிலை கொண்டு, இருக்கிறானோ - அந்த யோகி அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டிருந்தாலும், அவன் என்னுள் உறைகின்றான்.

32.
ஆத்மௌ பம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி யோ(அ)ர்ஜூந
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:
அர்ஜுனா! எவன் ஒருவன் ஆத்மாவின் தன்மையினால், சுகத்திலும், துக்கத்திலும் எதுவாக இருந்தாலும், எங்குமே சம நிலையைக் காண்பானோ, அவனே உயர்ந்த யோகி எனக் கருதப் படுகிறான்.

33.
அர்ஜுந உவாச:
யோ(அ)யம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸுதந
ஏதஸ்யாஹம் ந பச்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதம் ஸ்திராம்
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! உன்னால் கற்றுக் கொடுக்கப் பட்ட இந்த சமப் பார்வை கொண்டு நோக்கும் யோகத்தை, மன சஞ்சலத்தினால்  என்னால் அதை ஸ்திரமாக தொடர முடிவதில்லை.

34.
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோர் இவ ஸுதுஷ்கரம்
கிருஷ்ணா! இந்த மனமானது மிகவும் சஞ்சலத்தோடு, அலை பாய்ந்து,  உறுதியாக, கட்டுப்படாமல் உள்ளது. காற்றைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டமோ, அது போலவே அதைக் கட்டுப்படுத்துவதையும் நான் கஷ்டமாகக் கருதுகிறேன்.

35.
ஸ்ரீ பகவான் உவாச:
அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது:
பலம் பொருந்திய அர்ஜுனா! சந்தேகம் இல்லாமல் மனம் கட்டுப்படுத்துவதற்கு கடினமாகவும், அமைதி இல்லாமலும் தான் இருக்கும். ஆனால் முயற்சியின் மூலமாகவும், வைராக்கியத்தின் மூலமாகவும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

36.
அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:
வச்யாத்மநா து யததா சக்யோ(அ)வாப்தும் உபாயத:
தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனுக்கு, இந்த யோகம் அடைவதற்கு கடினம் என நான் எண்ணுகிறேன். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்தியவனுக்கு, அப்படி முயற்சி செய்பவனுக்கு, இதை (யோகத்தை) தகுந்த வழியில் அடைய முடியும்.

37.
அர்ஜுந உவாச:
அயதி ச்ரத்தயோ பேதோ யோகாச்சலிதம் ஆநஸ:  
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! மனதில் நம்பிக்கை இருந்தும், எவன் ஒருவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையோ, எவன் மனம் யோகத்தில் இருந்து வழி தவறுகிறதோ, அவன் யோகத்தில் பூரணத்துவம் பெறுவதில் தோல்வி கண்டு இறுதியில் எதை அடைவான்?

38.
கச்சிந் நோபய விப்ரஷ்டச் சிந்நாப்ரம் இவ நச்யதி
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி
பலம் பொருந்தியவனே! பிரம்மத்தின் பாதையில் தடுமாறி அவன் இரண்டிலும் தோல்வி கண்டு, ஆதரவு எதுவும் இல்லாமல் உடைந்த மேகத்தைப் போல அவன் அழிந்து விட மாட்டானா?

39.
ஏதந் மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸ்ய சேஷத:
த்வதந்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே
கிருஷ்ணா! எனது இந்த சந்தேகத்தை நீ முற்றிலும் போக்குவாயாக. ஏனென்றால் உன்னை அன்றி வேறு எவராலும் இந்த சந்தேகத்தைப் போக்க முடியாது.

விசாரம்
எந்த ஒரு செயலை நன்றாகச் செய்வதற்கும் இரண்டு காரணிகள் தேவை - ஒன்று சாதனம்/முயற்சி, இன்னொன்று வைராக்கியம்/மன உறுதி. பெரிய சங்கீத வித்வானாக வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நல்ல பயிற்சியோடு, வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமும் வேண்டும். பிரம்மத்தை அடையும் முயற்சியிலும் இந்த இரண்டும் தேவைப் படுகிறது.
சென்ற வாரம் பார்த்தோம் - இந்த ஆத்மாவானது எல்லா உயிர்களிலும் இருக்கின்றது, எல்லா உயிர்களும் அந்த பிரம்மத்தின் உள்ளே உறைகின்றது. சுற்றி உள்ள எல்லாமே ஈஸ்வர ரூபமாகப் பார்க்கும் போது, எல்லா நிகழ்வுகளையும் / உயிர்களையும் சமமாகப் பார்க்கும்  பார்வை வரும் போது, பகவான்/பக்தன் என்ற பேதம் தொலைந்து ரெண்டும் ஒன்றாகிறது. மனிதன் தெய்வம் ஆகிறான். இந்த சமப் பார்வை கொண்டவனே சிறந்த யோகி. இப்படிப்பட்ட மன நிலை கொண்ட யோகி, எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் அவன் தன்னுள்ளே இறைவனைக் கொண்டவன் ஆகிறான். உதாரணம் கண்ணப்ப நாயனார், திருமங்கை ஆழ்வார்.

அர்ஜுனனுக்கு இந்த சமயத்தில் எல்லோருக்குள்ளேயும் தோன்றும் சந்தேகம் தோன்றுகிறது. நாம் இப்படி பிரம்மத்தை நோக்கி செல்ல நினைத்தாலும் நம் மனம் நம்மை விடுவதில்லை. சம்சார வாழ்க்கையோ, இல்லை பிற ஆசைகளோ நம் மனதை அலை பாய வைத்து விடுகிறது. அப்படி தன்னை வெல்ல முடியாமல் அவனால் பிரம்மத்தையும் பெற முடியாமல் இந்த சம்சார உலகில் உள்ள சந்தோசங்களையும் பெற முடியாமல் ஆகி விடுமே. இப்படி ஆகாமல் இருக்க என்ன வழி என்றும்,  இந்த சந்தேகத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அன்றி வேறு எவராலும் போக்க முடியாது என்றும் அர்ஜுனன் கேட்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணரின் பதிலை அடுத்து காண்போம்.
 

1 comment:

  1. ஶ்ரீநி, இங்கே இதை எழுதுவதற்கு மன்னிக்கவும். இது வெளியிடவும் இல்லை. உங்க மெயிலுக்கு இரண்டு முறை கொடுத்த மெயில் திரும்பி வந்துவிட்டது. நாங்க மார்ச் 11-ஆம் தேதி இந்தியா திரும்புகிறோம். அதைச் சொல்லத்தான் மெயில் கொடுத்தேன். பதிவுகள் வரதாலே நீங்க பிசி என்பதால் பதில் கொடுக்கலைனு நினைச்சேன். எல்லாம் நலம் தானே! கவலையுடன்,

    கீதா சாம்பசிவம்.

    ReplyDelete