Monday, August 29, 2011

Chapter 2 - Saankhya Yoga [11-20]

11.
ஸ்ரீ பகவான் உவாச:
அசோச்யாந் அந்வ சோசஸ்த்வம் ப்ரஜ்ஞா வாதாம்ச்ச பாஷஸே
கதாசூநகதா சூம்ச்ச நாநுசோசந்தி பண்டிதா:
ஸ்ரீ பகவான் சொன்னது:
யாருக்காக வருத்தப் படக் கூடாதோ - அவர்களுக்காக நீ வருந்துகிறாய். அறிவு நிறைந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். அறிவுக் கூர்மை உள்ளவர்கள் உயிரோடு இருப்பவர்களுக்காகவோ, இறந்தவர்களுக்காகவோ வருந்துவதில்லை.

12.
ந த்வேவாஹம் ஜாது நாசம் ந த்வம் நேமே ஜனாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: சர்வே வயம் அத: பரம்
இதற்கு முன் நான் எந்த ஒரு சமயத்திலும் இல்லாதிருந்தேன். இங்குள்ள அரசர்களும் அவ்வாறே. நாம் வருங்காலத்திலும் இல்லாமல் போக மாட்டோம்

13.
தேஹிநோ(அ)ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி
இந்த சரீர உடல் எப்படி குழந்தைப் பருவம், வாலிபம், முதுமை என்று கடக்கிறதோ - அது போலவே ஆத்மாவும் கடக்கிறது. இன்னொரு சரீர உடலுக்கு மாறுகிறது. திட மனது உடையவன் இதற்காக வருந்த மாட்டான்.

14.
மாத்ராஸ்பர்சாஸ்து கௌந்தேய சீதோஷ்ண சுக து:கதா:
ஆகமா பாயிநோ(அ)நித்யாஸ் தாம்ஸ்திதி க்ஷஸ்வ பாரத
குந்தியின் பிள்ளையே! வெப்பம், குளிர், இன்பம், துன்பம் இவற்றை தருபவை மீது இந்த உடல் வைத்திருக்கும் தொடர்பிற்கு ஒரு ஆரம்பமும், முடிவும் உள்ளது. அது நிலைத்து இருப்பதல்ல. தைரியமாக இதைப் பொறுத்துக் கொள் அர்ஜுனா!

15.
யம் ஹி ந வ்யதயந்த் யேதே புருஷம் புருஷர்ஷப
ஸம து:க சுகம் தீரம் ஸோ(அ )ம்ருதத்வாய கல்பதே
புருஷர்களிடையே தலைவனாக இருக்கக் கூடியவனே! அந்த திட மனிதனை - எவனை இவை பாதிக்காதோ, எவனுக்கு சுகம், துக்கம் இரண்டும் சமமோ - அவனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி பெற்றவன்.

16.
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோர் அபி த்ருஷ்டோ(அ)ந்தஸ் த்வநயோஸ் தத்த்வ தர்சிபி:
இல்லாமல் இருப்பது உண்மை ஆகாது. உண்மையாக இருப்பது இல்லாமல் போகாது. உண்மையை அறிந்தவர்கள் இவை இரண்டையும் அறிவர். அவர்களே இந்த தத்துவத்தைக் கண்டவர்கள்.

17.
அவினாசி து தத் வித்தி யேந ஸர்வம் இதம் ததம்
விநாசம் அவ்யயஸ்யாஸ்ய ந கச்சித் கர்தும் அர்ஹதி
ஆத்மாவாகிய அது அழிவில்லாதது. அது இங்குள்ள எல்லாவற்றிலும் பரந்து விரிந்து உள்ளது. அழிவில்லாத அதற்கு எவராலும் அழிவை ஏற்படுத்த முடியாது.

18.
அந்தவந்த இமே தேஹா நித்யஸ் யோக்தா: சரீரிண:
அநாசிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத
சாஸ்வதமான, அழிவில்லாத, கணக்கிட முடியாத இந்த ஆத்மா உறைகின்ற உடலுக்கோ முடிவு என்ற ஒன்று உண்டு. எனவே அர்ஜுனா! நீ யுத்தம் செய்.

19.
ந ஏநம் வேத்தி ஹந்தாரம் யச்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே
எவன் ஒருவன் தன்னைக் கொல்பவன் என்றோ,  கொல்லப்படுபவன் என்றோ நினைக்கின்றானோ - இரண்டிலும் அவன் ஒன்றை அறியவில்லை. அவன் கொல்லவும் இல்லை, கொல்லப்படுபவனும் இல்லை

20.
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: சாஸ்வதோ(அ)யம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே சரீரே 
அவன் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஒரு முறை உருவான பின், இல்லாமல் போவதும் இல்லை. அவன் பிறப்பில்லாதவன் (அநாதி), சாஸ்வதம் ஆனவன், மாற்றம் இல்லாதவன், பழமையானவன். அவன் உடல் கொல்லப்படும் போதும் ஆத்மாவாகிய அவனிற்கு அழிவில்லை.

விசாரம்
கிருஷ்ணரின் உபதேசம் இதில் இருந்து தான் ஆரம்பம். ஆத்மாவைப் பற்றிய வர்ணனையில் இருந்து ஆரம்பிக்கும்.

பதினாறாம் ஸ்லோகத்தில் சொல்வது வெளிப்படையாகப் புரிவது கொஞ்சம் கஷ்டம் போல இருந்தாலும் அதன் அர்த்தம்:
நம்மைச் சுற்றி உள்ள (சரீர உடல் கொண்ட மனிதர்கள், பொருட்கள்) எல்லாமே சாஸ்வதம் ஆனவை இல்லை. அவை எல்லாவற்றிற்கும் இறுதி, முடிவு என்ற ஒன்று உண்டு. இவை தான் 'இல்லாமல் இருப்பது' என்று சொல்லப்படுகிறது. ஆத்மா என்பதற்கு அப்படி எந்த ஒரு ஆதியோ, அந்தமோ கிடையாது. இது தான் 'உண்மையாக இருப்பதாக'ச் சொல்லப்படுகிறது. இதை உணர்ந்த ஒருவனுக்கு மோக்ஷம் சாத்தியம்.

சுகமோ,  துக்கமோ, வெப்பமோ, குளிரோ எதுவாக இருந்தாலும் அவை நிலைத்து இருக்காது. அதற்கு ஒரு ஆதியும், அந்தமும் உண்டு. தித்திப்பாக இருக்கிறது என்பதற்காக நம்மால் இனிப்பாக சாப்பிட முடியுமா, அதை சமன் செய்ய பிற சுவையும் நம் நாக்கு கேட்கிறதே. அதை போலவே நம் வாழ்கையை சமன் செய்ய சுகமும், துக்கமும் அவசியம். துக்கம் வந்தால் தானே சுகத்தின் அருமை தெரியும். ஒரு ஸ்தித-பிரக்ஞன் - சுகம், துக்கம் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதவனே, அவை இரண்டையும் சமமாகப் பார்ப்பவனே இந்த ஆத்மா பற்றிய உண்மையை உணர்ந்தவன் ஆகிறான். அவனுக்கே மோக்ஷம் கிடைக்கிறது.

இஸ்கான் என்று சொல்லப்படும் International Society for Krishna Consciousness (ISCON) கோவில்களில் இந்த பதிமூன்றாம் ஸ்லோகத்தை குறித்த ஒரு படம் அல்லது சிலை வைத்திருப்பார்கள். ஒரு மனித உடல் கர்ப்பத்தில் இருக்கும் சிசு தொடங்கி, பிறந்து, குழந்தையாகத் தவழ்ந்து, பாலகன் ஆகி, பின்னர் வாலிபன் ஆகி, நடுத்தர வயதினன், முதுமை பெற்று கூன் விழுந்து, பின்னர் இறக்கின்றான். அது வரை அவன் சரீர உடலில் இருக்கும் ஆத்மாவானது, பின்னர் வேறு ஒரு உடலை நோக்கி செல்கிறது. நாம் இறப்பினால் வருந்துவது இந்த சரீர உடலின் முடிவிற்குத் தான். கிருஷ்ணர் சொல்வது, நாம் அதை தாண்டி இந்த உடலை ஆத்மாவின் ஒரு கருவியாகக் கருதுவது. 'நிமித்த மாத்ரம் பவ:' என்று பின்னால் ஒரு ஸ்லோகத்தில் வரும். நாம் எல்லாரும் ஒரு நிமித்தமே - கருவியே என்பது இதன் பொருள். இந்த சரீர உடலை ஒரு detached attachment கொண்டு பார்க்கும் ஒரு ஞானத்தை, சரீர உடலை ஆத்மாவை தாங்கும் ஒரு carrier ஆக மட்டும் பார்க்கும் ஒரு நிலையை இந்த இரண்டாம் அத்தியாயம் நமக்கு சொல்லித் தருகிறது.

No comments:

Post a Comment